முதல்வர் அம்மா சொன்ன கதையும் சொல்லாத கதையும்...

தமிழகத்தில் ஏறிவரும் வெயில் சூட்டின் வேகத்தை விட தேர்தல் சூடு அதிகரித்துவருகிறது. 2 மாதங்கள் அலைந்து திரிந்து பொதுமக்களுக்கு ஜஸ் வைத்தால் போதும் 5 வருடங்களுக்கு கவலையில்லை.பணம், குவாட்டர்,ஜாதி,மதம் இப்படி எதைவைத்தாவது ஒட்டு வாங்கிவிட  எந்த கொள்கையும் இல்லாத கூட்டணி கூத்து நடந்து கொண்டிருக்கிறது.
                       தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தெருதெருவுக்கு நடந்து கொண்டிருக்கிறது. பிரச்சாரத்தில் சமீபகாலமாக குட்டிக்கதை சொல்லும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இன்றைய முதல்வர்,நேற்றைய முதல்வர் எல்லோரும் கதைகளை தயாரிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பொதுவாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை. அனைத்தும் காணொலி காட்சிதான். சென்னையில் வரலாறு காணாத வெள்ளம் வந்த போது தனது தொகுதியான ஆர்.கே நகர் தொகுதிக்கு மட்டும் சென்ற மக்களை சந்தித்ததார். மழையில் நனைந்து கொண்டிருந்த பொதுமக்களிடம் கூட குட்டிகதை சொல்லியிருக்கிறார். அந்த கதையை மக்கள் நல கூட்டணி (வைகோ தலைமையிலான கூட்டணி) கார்ர்   கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கிறார்.

  அம்மா சொன்ன கதை...

ஒரு ஊரில் ஒரு அரசர் தமக்கு அடுத்தபடியாக ஆளதகுதியான நபரைத் தேர்ந்தெடுக்க சில போட்டிகளை நடத்தினாராம். கடைசியில் இருவர் மட்டுமே மிஞ்சினார்களாம். அவர்கள் இருவரிடமும் ஒரே அளவிலான தங்கக் கட்டிகளைக் கொடுத்து, இதை செம்மையாக பயன்படுத்தி மூன்று மாதத்திற்குப் பிறகு அரசவைக்கு வந்து தகவல் கூற வேண்டும் என தெரிவித்தாராம். மூன்று மாதங்கள் கழித்து இருவரும் திரும்ப வந்துள்ளனர். முதல் நபர் தங்கத்தை தன்னுடைய மகனிடமும், மகளிடமும் கொடுத்துவிட்டாராம். உங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் மட்டும்தானா என்று கேட்டதற்கு முதல்நபர் மற்றவர்களை தலைமுழுகி விட்டேன் என்றாராம். அடுத்த நபரை அழைத்த போது அவர் நூறு பேருடன் வந்தாராம். இவர்கள் யார் என்று கேட்டதற்கு, இவர்களெல்லாம் ஏழைகளாக இருந்தவர்கள். தங்கக்கட்டிகளை இவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தேன். அந்தப் பணத்தை வைத்து வியாபாரம் செய்து நல்ல நிலைக்கு வந்து விட்டார்கள் என்று இரண்டாவது நபர் கூறினாராம்.குடும்ப நலன் பார்க்காமல் ஏழைகளுக்கு உதவிய இவரே நாட்டை ஆள தகுதியானவர் என மன்னரும் அவையினரும் முடிவு செய்து விட்டார்களாம்.இந்தக் கதையை கூறிவிட்டு, இரண்டாவது நபரைப் போல எனது தலைமையிலான அரசும் மக்களுக்கு உதவி வருகிறது என்று கதையை முடித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. முதல் நபர் குடும்பத்திற்குள்ளேயே தங்கத்தை வைத்துக் கொண்டார் என்றால், இரண்டாவது நபர் ஒரு நூறு பேரை மட்டும்தான் பணக்காரர்களாக மாற்றியிருக்கிறார்.
அமைச்சர்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள், கிரானைட், மணல் குவாரியை சூறையாடியவர்கள், மதுக்கடை பக்கத்தில் பார் வைத்தவர்கள் என இரண்டாவது நபரின் ஆட்சியிலும் சிலர் மட்டுமே பலன் பெற்றுள்ளனர்.

அம்மா சொல்லாத கதை...

இன்னும் கொஞ்சம் கதையை நீட்டிக்கலாம். இரண்டு நபர்களின் செயலாலும் திருப்தியடையாத அரசரும், அவையும் இனி தனி ஆவர்த்தனம் கூடாது என முடிவு செய்து, கூட்டணியாக வந்த நான்கு பேரை அழைத்து தங்கத்தைக் கொடுத்தாராம். அவர்களோ தங்கத்தை விற்று விவசாயிகளுக்கு விதை நெல்லும் , மீனவர்களுக்கு வலையும், நெசவாளர்களுக்கு நூலும் வாங்கிக் கொடுத்தார்களாம்.

இதனால் ஒருசிலர் மட்டுமின்றி ஊரே பயனடைந்ததாம்.மாறி மாறி தங்கத்தை சூறையாடியவர்களை விட, மக்கள் நலன் குறித்து சிந்தித்த இவர்களே நாட்டை ஆள தகுதியானவர்கள் என அவையினர் முடிவு செய்தார்களாம். இது கதையல்ல. ... நடக்கப் போகிற நிஜம்

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments