“எங்க ஊர்க்காரங்கே…” என்று மதுரை வட்டார
வழக்குமொழியில் அவர் ஒரு மேடையில் பேசத் தொடங்கியபோது, பேசிக் கொண்டிருந்தது ஒரு திரைப்பட
இயக்குநர் அல்ல; தன்
மண்ணின் மனிதன் தனது மக்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். ஜீன்ஸும் டி-ஷர்ட்டும்
அணிந்திருந்தாலும், அவருக்குள்
வாழ்ந்த கிராமத்து மனிதனை நகர வாழ்க்கையால் மாற்ற முடியவில்லை.
பாரதிராஜாவின் வருகைக்கு முன்பு, தமிழ் சினிமாவின் பெரும்பாலான கதைகள் நகரங்களின் வீடுகளிலும், ஸ்டுடியோக்களின் செயற்கை அரங்குகளிலும் சுற்றிக் கொண்டிருந்தன. அந்தப் போக்கை உடைத்து, புழுதி பறக்கும் கிராமச் சாலைகளையும், வயல்வெளிகளையும், வெயிலில் கருகிய முகங்களையும், வெள்ளந்தியான மனிதர்களையும் பெரிய திரைக்குக் கொண்டு வந்தவர் பாரதிராஜா. அது ஒரு புதிய இயக்குநரின் வருகை மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் பார்வையையே மாற்றிய ஒரு பண்பாட்டு நிகழ்வாகும்.


