1100 ஆண்டுகள் நிலைத்துநிற்கும் பாண்டிய மன்னர் காலத்து பழமை வாய்ந்த மடைக்கல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா உரப்பனூர் கண்மாயில் 1100 ஆண்டுகள் நிலைத்துநிற்கும் பாண்டிய மன்னர் காலத்து பழமை வாய்ந்த மடைக்கல் சரித்திர ஆய்வாளர்களை வியப்படையச் செய்துள்ளது.
ஆரம்ப காலத்தில் முத்துக்களை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டிய பாண்டிய மன்னர்கள் பின்னாளில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு உற்பத்தியை பலமடங்கு பெருக்கினார்கள்.இதற்காக காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்கியதுடன் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளையும்,கண்மாய்களையும் புதிதாக உருவாக்கி னார்கள்.அதில் ஒன்று தான் 9ம் நூற்றாண்டில் மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த பராந்தக பாண்டியன் வீரநாராயணன் உருவாக்கிய உரப்பனூர் கண்மாய் ஆகும்.இந்த உரப்பனூர் கண்மாயின் கீழ்புறத்தில் கீழஉரப்பனூரும்,மேல்புறத்தில் மேலஉரப்பனூரும், வடபகுதியில் ஊராண்டஉரப்பனூரும் அமைந்துள்ளது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கண்மாயில் 1100 ஆண்டுகள் பழமையுடன் நீடித்து நிலைத்து நிற்கும் மடைக்கல் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.இந்த 12அடி உயர கல்லில் உள்ள அளவுகள் மூலமாக கண்மாயில் தேங்கி நிற்கும் தண்ணீரை அக்காலத்து மக்கள் கணக்கிட்டு விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மிகவும் நேர்த்தியான கலையம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மடைக்கல்லில் அதனை 9ம் நூற்றாண்டில் உருவாக்கிய முற்காலத்து பாண்டிய மன்னர் பராந்தக பாண்டியன் வீரநாராயணன் காலத்து கல்வெட்டு இன்றும் அழியாமல் காணப்படுகிறது.இந்த கல்வெட்டின் மேல்புறத்தில் வெண்கொற்றக் குடையுடன் இருபுறமும் சாமரங்கள் மற்றும் கீழே கலசத்துடன் விளக்கு கோட்டு உருவமாக செதுக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழ் கிரந்த எழுத்துக்களும் பராந்தக பாண்டிய மன்னரின் மற்ற பெயர்களான கரிவரமல்லன்,வீரநாராயணன் ஆகிய பெயர்கள் கல்வெட்டில் காணப்படுகிறது. இந்த கல்வெட்டு குறித்து இன்றும் சரித்திர ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி அதன் ஸ்திரத்தன்மை குறித்து வியப்படைந்து செல்கின்றனர். அன்றைய தினம் ஆயிரம் ஏக்கருக்கு மேலான விவசாய நிலங்களுக்கு நீர்பாசனம் அளித்த இந்த கண்மாயில்உள்ள மடைக்கல் கடந்த 1100 ஆண்டுகளாக இயற்கையை வென்று இன்றும் நிமிர்ந்து நின்று பாண்டிய மன்னரின் புகழை பறைசாற்றி வருகிறது.


இருப்பினும் கால நிலை மாற்றம் மற்றும் பல்வேறு சூழ்நிலை காரணமாக தற்போது உரப்பனூர் கண்மாயிலுள்ள இந்த மடைக்கல்லின் அடித்தளம் சற்றே ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.மடைக்கல்லின் கீழே போடப்பட்ட சுட்ட செங்கல் மற்றும் கற்களினால் சுண்ணாம்பு சாந்து வைத்து கட்டப்பட்ட அஸ்திவாரம் சிதைந்து செங்கற்கள் சிதைந்து சிதறிக் கிடக்கிறது.எனவே 1100ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாண்டிய மன்னர் காலத்து பழைமமிகு உரப்பனூர் மடைக்கல்லினை பாதுகாத்திடும் வகையில் அதிகாரிகள் உரிய பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சரித்திர ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..
- தகவல் தினபூமி திருமங்கலம் நிருபர் செல்வராஜ்

Comments