பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label கோயில். Show all posts
Showing posts with label கோயில். Show all posts

கன்னிப் பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்து 36 திருமண ஜோடிகள் வீரமரணம்

மதுரை மாவட்டம் திருமங்கலம்  அருகே தஞ்சமடைந்த கன்னிப் பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்து 36 திருமண ஜோடிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி 72 தாத்தகாரு வீரக்கோவில்: 
200 ஆண்டுகளுக்கு முந்தைய மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு:ஆங்கிலேயர்கள் காலத்தில் ஜமீன்தாரிடமிருந்து தப்பிவந்து கிராமத்தில் தஞ்சடைந்த கன்னிப்பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்து 36 திருமண ஜோடிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி 72 தாத்தகாரு வீரக்கோவில் குறித்த மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மதுரையம்பதியின் சுற்றுப் பகுதிகளில் குறுநில மன்னர்களாக ஆட்சி புரிந்து வந்த காலத்தில் சாப்டூர் ஜமீன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க சம்பவங்கள் சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளது. இருப்பினும் ஜமீன்தாரிடமிருந்து தப்பி வந்து கிராமத்தில் தஞ:சமடைந்த கன்னிப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் அவரை காட்டிக் கொடுக்க மறுத்து ஒரே சமயத்தில் 36 திருமண ஜோடிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி 72 தாத்தகாரு வீரக்கோவில் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியின் போது சாப்டூரை தலைமையிடமாக கொண்டு ஜமீன்தார்களின் நிர்வாகம் இருந்து வந்துள்ளது.அப்போது பருவமடையும் கன்னிப்பெண்களை சேவகம் செய்வதற்காக ஜமீன்தார்களிடம் ஒப்படைப்பது வழக்கமாக இருந்து வந்தது.இந்த விஷயத்தில் யாருக்கும் விதிவிலக்கு இல்லாத நிலையில் ஏழை ஒருவரின் மகள் பருவமடைந்த தகவல் ஜமீன்தர்ருக்கு சென்றுள்ளது.இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் அரண்மனை காவலர்கள் அந்த ஏழையின் மகளை அழைத்துவரச் சென்றுள்ளனர்.அப்போது தான் சீராட்டி வளர்த்த மகளை அரமண்மனைக்கு அனுப்பிட மனமில்லாததால் அந்த ஏழை தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் ஜமீனை விட்டு வெளியேறி ஒவ்வொரு கிராமம் கிராமமாக தஞ்சம் கேட்டு கால்நடையாக சென்றுள்ளார்.
வழியில் அவர் சென்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஜமீன்தாரின் கோபத்திற்கு ஆளாகிட வேண்டாம் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்துள்ளனர்.இதனால் மனமுடைந்த அந்த ஏழை தனது மனம் போன போக்கில் நடந்து சென்று கடைசியாக திருமங்கலம் அருகேயுள்ள கட்ராம்பட்டி எனும் கிராமத்தில் தஞ்சம் கேட்டுள்ளார்.அன்றைய காலகட்டத்தில் கட்ராம்பட்டி கிராமம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான 48கிராமங்களின் தாய் கிராமமாக திகழ்ந்து வந்துள்ளது.இந்த கிராமத்தில் வசித்தவர்கள் அனைவரும் வீரர்களும் புஜபல பராக்கிரமம் கொண்டவர்களுமாக இருந்துள்ளனர்.மேலும் இந்த சமுதாயத்திற்கு சொந்தமான 48 கிராமங்களைச் சேர்ந்தவர்களும் திருமணம் முடிக்க வேண்டுமென்றால் தங்களது தாய் கிராமமான கட்ராம்பட்டியில் வந்து திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனராம். இத்தகைய சிறப்பு மிக்க கட்ராம்பட்டி கிராமத்திற்கு வந்து சேர்ந்த அந்த ஏழை மற்றும் அவரது குடும்பத்திற்கு கிராமமக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆதரவு தெரிவித்து அடைக்கலம் கொடுத்துள்ளனர்.மேலும் தங்களது உயிரே போனாலும் பரவாயில்லை கட்ராம்பட்டியை நம்பி வந்த அந்த கன்னிப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றுவது என்றும் சபதம் செய்துள்ளனர்.
இதனிடையே தனது அரண்மனை சேவகத்திற்கு வராமல் தப்பியோடி தலைமறைவாகி விட்ட அந்த கன்னிப்பெண்ணை பிடித்து கொண்டு வருமாறு சாப்டூர் ஜமீனிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட வீரர்கள் ஒவ்வொரு கிராமமாக கன்னிப்பெண்ணை தேடி வந்துள்ளனர்.கடைசியாக கட்ராம்பட்டி கிராமத்திற்கு வந்து வீரர்கள் விசாரித்தபோது யாரும் அந்த கன்னிப்பெண்ணை காட்டிக் கொடுக்காமல் ஒற்றுமையாக இருந்துவிட்டனர்.அந்த சமயத்தில் தாய் கிராமமான கட்ராம்பட்டி கிராமத்தின் வடமேற்கு பகுதியில் மரங்கள் அடர்ந்த இடத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த 36 ஜோடிகளுக்கு திருமண வைபம் நடைபெற்றுள்ளது.இதனை பார்த்த ஜமீன்தாரின் வீரர்கள் அந்த இடத்திற்கு சென்று கன்னிப்பெண்ணை குறித்து விசாரித்துள்னர். அங்கிருந்தவர்களும் புதுமணத் தம்பதியரும் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று கூறிவிட்ட நிலையில் ஜமீன்தாரின் வீரர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த சிலர் கொம்புஊதி ஜமீன்தாரின் படைகள் ஏமாந்து திரும்பிச் சென்றுவிட்டன என்று ஏளனம் செய்துள்ளனர்.இது ஜமீன் வீரர்களுக்கு தெரியவரவே அவர்கள் அனைவரும் கன்னிப்பெண்னை தேடி அலைந்து திரிந்த ஆவேசத்தில் கட்ராம்பட்டியில் அன்றையதினம் 36 ஜோடிகளுக்கு திருமணம் செய்த இடத்திற்கு வந்து மணமகன்களை நிறுத்திவைத்து தஞ்சமடைந்த கன்னிப்பெண் குறித்து கேட்டு மிரட்டியுள்ளனர்.
அப்போது புதுமாப்பிள்ளைகளாக மணக்கோலத்தில் இருந்தவர்கள் கன்னிப்பெண் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது,அப்படி ஏதேனும் தெரிந்தாலும் தாய் கிராமத்தின் நியமப்படி உயிரே போனாலும் எதுவும் கூறமாட்டோம் என்று ஆணித்தரமாக கூறியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த ஜமீன்தாரின் படைகள் அன்றையதினம் ஆட்சிசெய்துவந்து ஆங்கிலேயரின் சிறப்பு உத்தரவை பெற்று தஞ்சமென வந்த கன்னிப்பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்த 36 புதுமாப்பிள்ளைகளையும் வாளால் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர்.அப்போது மக்கள் வெள்ளமென திரண்டு வந்து ஜமீன்வீரர்களுடன் போராடியபோது அவர்கள் கட்ராம்பட்டி கிராமத்திலிருந்து பின்வாங்கிச் சென்றுவிட்டனர். இந்நிலையில் அன்றைய தினம் கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்த நிலையில் ஜமீன்வீரர்களால் படுகொலை செய்யப்பட்டு வீரமரணமடைந்த தங்களது கணவர்களது சிதையில் எரிந்து கொண்டிருந்த தீயில் குதித்து 36 புதுமணப் பெண்களும் உடன்கட்டை ஏறி வீரச்சாவு அடைந்துள்ளனர்.இதனால் அந்த கன்னிப்பெண் ஜமீன் சேவகத்திற்கு செல்லாமல் கட்ராம்பட்டி கிராம மக்களால் குடும்பத்துடன் காப்பாற்றப்பட்டாள்.மொத்தத்தில் தாய் கிராமமான கட்ராம்பட்டி கிராமத்தில் தஞ்சமென வந்த கன்னிப்பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்து ஜமீன்தாரின் படைவீரர்களின் தாக்குதலுக்கு இலக்காகி 36ஜோடிகள் வீரமணடைந்த இடம் தற்போது 72 தாத்தகாரு வீரக்கோவிலாக உள்ளது.
இன்றைக்கும் கட்ராம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் வசித்திடும் அந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது வீடுகளில் நடைபெறுகின்ற சுபகாரியங்கள் உள்ளிட்ட அனைத்து காரியங்களையும் 72தாத்தகாரு வீரக்கோவிலில் வழிபாடு செய்த பின்னரே தொடங்குகின்றனர்.கடந்த காலத்தில் திறந்தவெளியாக இருந்த 72தாத்தகாரு வீரக்கோவிலில் தற்போது பீடம் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.மழை வேண்டி தாத்தகாரு கோவிலில் வழிபாடு நடத்தினாலும்,ஆடமாடுகளை விற்பதற்கும் பல்லிசகுனம் உத்தரவாக கிடைத்திடும்.மேலும் இந்த கோவிலில் செய்யப்படும் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறி ஜெயம் கிடைத்திடும் என்ற நம்பிக்கை மக்களிடையே இன்றும் காணப்படுகிறது.எனினும் 72தாத்தகாரு வீரக்கோவிலின் வீரவரலாறு இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெரும்பாலும் தெரியாமலே உள்ளது. 200ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் அருகே தாய்கிராமமாக திகழ்ந்த கட்ராம்பட்டியில் தஞ்மடைந்த கன்னிப் பெண்ணை காப்பாற்றுவதற்காக 36புதுமண ஜோடிகள் தங்களது உயிரை தியாகம் செய்து வீரமரணமடைந்த 72 தாத்தகாரு வீரக்கோவிலின் மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு தமிழர்களின் வீரத்தையும் விவேகத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

புகைப்படம் ,கட்டுரை ஆக்கம்
திருமங்கலம் செல்வராஜ்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் அடங்காத காளைகளை அடக்கி சாதனைகள் படைத்த மாவீரருக்கு கோவில் கட்டி வழிபடும் கிராமமக்கள்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் அடங்காத காளைகளை அடக்கிப்பிடித்து சாதனை செய்து உயிர்நீத்த மாடுபிடி வீரரின் நினைவாக கோவில் கட்டியுள்ள அப்பகுதி மக்கள் அவரை தெய்வமாக வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
சுமார் 300ஆண்டுகளுக்கு முன்பாக மாமதுரை நகரின் மேற்கு தொலைவில் விவசாய செழிப்பு மிகுந்த இடத்திற்கு கருத்தமாயன் என்பவரின் குடும்பத்தினர் வந்து தங்கியுள்ளனர்.இதை தொடர்ந்து கருத்தமாயனின் உறவினர்களும் அந்த செழிப்பு நிறைந்த பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதையடுத்து சில ஆண்டுகளில் அந்த நிலப்பகுதி மக்கள் அதிகமாக வசித்திடும் சொரிக்காம்பட்டி என்ற கிராமமாக மாறியிருக்கிறது.இந்த ஊரின் முத்தகுடியான கருத்தமாயனும் மக்களும் ஒன்றிணைந்து விவசாய பணிகளில் தீவிரம் காட்டியதுடன் கால்நடைகள் வளர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.வயலில் உழைத்த களைப்பு நீங்கிடவும் விவசாய பெருமக்களுக்கு உற்சாகம் செய்திடவுமான விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாறியிருந்தது.அதன்படி இங்கு நடந்திட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுகளில் கருத்தமாயனின் நான்கு மகன்களில் கடைசி மகனான அழகத்தேவன் என்பவருக்கு காளைகளை அடக்குவதில் எல்லையில்லா ஆர்வம் இருந்துள்ளது.இவருடைய மாடுபிடி ஆர்வத்தை ஊக்குவித்து போட்டிகளில் பெற்றிடும் வெற்றிகள் அனைத்திற்கும் அழகத்தேவனின் உயிர்நண்பனான சமயன் என்பவர் திகழ்ந்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றிடும் பல்வேறு வகையான காளைகளின் குணாதிசயங்களை ஆய்வு செய்து அதனை மடக்கிப்பிடிக்கும் கலையினை வளர்த்துக் கொண்ட அழகத்தேவனும் அவரது நண்பர் சமயனும் சிறந்த மாடுபிடி வீரர்களாக அக்காலத்தில் உருவாகியிருந்தனர்.இது எவரிடமும் பிடிபடாத மாடு என்று உரிமையாளர்களால் சவால்விடப்படும் மாடுகளை தன்னுடைய தனித்திறமையால் மடக்கிப்பிடிப்பது அழகத்தேவனின் தனிச்சிறப்பாகும்.இன்றைய அலங்காநல்லூரைப் போன்று அன்றைய காலகட்டத்தில் ஜல்லிக்கட்டிற்கு பெயர்போன ஊராக விக்கிரமங்கலம் திகழ்ந்துள்ளது.இந்நிலையில் விக்கிரமங்கலம் ஜல்லிக்கட்டில் நின்று விளையாண்ட பல்வேறு காளைகளை மின்னல் வேகத்தில் அழகத்தேவன் மடக்கிப்பிடித்து தொடர் வெற்றிகளை குவித்து வந்துள்ளார்.இதனால் அழகத்தேவனின் வீரமும் காளைகளை அடக்கிடும் திறமையும் மாமதுரையைச் சுற்றிலும் பரவியுள்ளது.அழகத்தேவன் பங்கேற்றிடும் ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியையும் காண்தற்காக அக்காலத்திலே ஒரு ரசிகர் பட்டாளமே அவருக்கு இருந்துள்ளது.இதனை கண்டு பொறாமை கொண்ட அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மூத்த மாடுபிடி வீரர்கள் ஒன்று சேர்ந்து அழகத்தேவனை நீண்காலமாக கண்காணித்து அவரது யுக்திகளை கணித்துள்ளனர்.
இதையடுத்து அழகாத்தேவனை வீழ்த்துவதற்காக அடங்காத காளையொன்றை அந்த கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் தயார் செய்தனர்.அந்த காளைக்கு அழகத்தேவனின் தனித்துவத்திற்கு எதிரான பாய்ச்சலை சொல்லிக்கொடுத்து பக்குவப்படுத் தியிருந்தனர்.மேலும் தங்களது மாட்டை அடக்குபவருக்கு தங்களது கிராமத்தின் மூத்தகுடியின் பெண்ணை திருமணம் செய்து தருவதாக அறிவிப்பு செய்துள்ளனர்.இந்த சூழ்ச்சியை அறியாத மாடுபிடி வீரரான அழகத்தேவனும் அவரது உயிர்நண்பனுமான சமயனும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டனர்.அப்போது மூத்த மாடுபிடி வீரர்களால் தயார் செய்யப்பட்ட முரட்டுக்காளை மட்;டும் அழகத்தேவனிடம் சிக்கிடாமல் போக்குகாட்டி விளையாடியுள்ளது.ஒருகட்டத்தில் விடாமுயற்சியுடன் வீறுகொண்டு எழுந்த அழகத்தேவனை அந்த காளை வயிற்றில் குத்தி குடலை சரியச் செய்துள்ளது.இருப்பினும் குடல் சரிந்து ரத்தம் வெள்ளமாக சிதறிய நிலையிலும் தனது இறுதிகட்ட சூட்சுமத்தை பயன்படுத்திய அழகத்தேவன் அடங்காத காளையை அடக்கி மண்ணில் சாய்த்துவிட்டு தானும் மண்ணில் சாய்ந்துள்ளார்.இதனை கண்ட அவரது நண்பர் சமயன் தான் உடுத்தியிருந்த துணியை கிழித்து  அழகத்தேவனின் வயிற்றில் கட்டி அவரை தனது தோழில் தூக்கிப் போட்டுக்கொண்டு சொரிக்காம்பட்டி கிராமத்திலுள்ள நந்தவனம் எனும் தோட்டத்திற்கு ஓட்டமாக ஓடிவந்து சேர்த்துள்ளார்.
தனது மகன் அழகத்தேவன் ஜல்லிக்கட்டில் காயமடைந்த தகவலறிந்த அவரது தந்தை கருத்தமாயன் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் நந்தவனம் தோட்டத்திற்கு திரண்டு வந்து ஆறுதல் தெரிவித்தனர்.பின்னர் தொடர்சிகிச்சை மேற்கொண்டதன் பலனாக அழகத்தேவன் உடல்நலம் பெற்றிட ஆரம்பித்துள்ளார்.இதனையறிந்த பக்கத்து கிராமத்து மூத்த மாடுபிடி வீரர்கள் அழகத்தேவன் மீண்டு வந்தால் தங்களது மூத்தகுடியின் பெண்ணை திருமணம் முடிக்க கேட்டுவிடுவான் என்று பயந்து அழகத்தேவனை சதியின் மூலம் கொன்று விடமுடிவு செய்தனர்.இதற்காக அழகத்தேவன் வைத்தியம் செய்து வந்த இடத்திற்கு தங்களது ஆட்களை ஆள்மாற்றி அனுப்பினார்கள். ஆள்மாறாட்டம் செய்து நந்தவனம் சென்றவர்கள் அழகத்தேவனுக்கு குடல் சரிந்த இடத்தில் கள்ளிக் கொழுந்தினை வைத்து மருந்து கட்டியுள்ளனர். இதனால் கள்ளியின் விஷம் சிறிது சிறிதாக அழகத்தேவனின் உடலில் கலந்து உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகிறது.அப்போது அடங்காத காளை களையெல்லாம் தனது மதிநுட்பத்தால் மடக்கிப்பிடித்த மாவீரன் அழகத்தேவன் தனது கடைசி ஆசையாக தனக்கு சொரிக்காம்பட்டி நந்தவனத்தில் கோவில் கட்ட வேண்டும்,அதன் மூலமாக ஜல்லிக்கட்டு பற்றிய விழப்புணர்வு வரும் சந்ததியினருக்கு தெரியவந்திடும் என்று தனது கிராமத்தினரிடம் கூறிவிட்டு உயிர் துறந்துள்ளார்.
இதையடுத்து மாடுபிடி மாவீரன் அழகத்தேவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிடும் வகையில் அவரது வாரிசுகளும்,கிராமத்தினரும் ஒன்றிணைந்து சொரிக்காம்பட்டி கிராமத்தில் அழகிய கோவிலை எழுப்பி இன்றும் வழிபட்டு வருகின்றனர்.இந்த கோவிலில் காளையை அழகத்தேவன் அடக்குவது போன்ற சிலை வைக்கப்பட்டு அதனை அப்பகுதி மக்கள் வணங்கிச் செல்கின்றனர்.மேலும் நட்பின் இலக்கணமாக அழகத்தேவனுடன் இருந்த சமயனுக்கும் அங்கே சிலை வைக்கப்பட்டள்ளது.இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜல்லிக்கட்டில் அவர்களது வீரத்தையும் விவேகத்தையும் போற்றிடும் வகையில் இருவரும் இன்றுவரை அப்பகுதி மக்களின் நெஞ்சங்களில் நீங்காமல் உள்ளனர்.அதே போல் குடல்சரிந்த அழகத்தேவனை தனது தோளில் சமயன் தூக்கிச் சென்ற போது அவர்கள் தாகசாந்தி செய்திட இளைப்பாறிய இடங்களில் கற்கள் போடப்பட்டு மக்கள் வழிபாடு நடத்திச் செல்கின்றனர்.வீரம் விளைந்த மாமதுரை மண்ணில் அடங்காத முரட்டுக்காளைகளை அடக்கி சாதனை படைத்து சதியினால் உயிர்நீத்த மாடுபிடி வீரர்களின் முதல்வனான அழகத்தேவனின் கோவிலில் வழிபட்டு சென்றால் ஜல்லிக்கட்டில் போட்டிகளில் வெற்றி உறுதி என்பதால் சொரிக்காம்பட்டி கிராமத்திற்கு வந்து அழகத்தேவன் கோவிலில் வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.வீரர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, அழகத்தேவன் போன்ற மாவீரர்களின் தியாகத்தினால் இன்றுவரை அழியாமல் உள்ளது என்பதே நிஜம்....
- செல்வராஜ்.