- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தால் அழிவு நிலையில்…தலைப்பகுதி உடைந்த நிலையில் நாராயணன் லட்சுமி நாராயணன் கற்சிற்பம்.(கி.பி 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை )
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே மோதகம் என்ற சுப்புலாபுரம் பகுதியில் 800 ஆண்டு பழமையான கற்சிலை கண்டறியப்பட்டது.
தே.கல்லுப்பட்டி அருகே மோதகம் என்ற சுப்புலாபுரம் பகுதியில் சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை கௌரவ விரிவுரையாளரும் , பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் முனைவர் லட்சுமண மூர்த்தி, முனைவர் பாலகிருஷ்ணன் ஆய்வாளர் அனந்தகுமரன் ஆகியோர் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்ட போது சாலை ஓரம் கி.பி 13 ம் நூற்றாண்டை சேர்ந்த தலைப்பகுதி உடைந்த நிலையில் கற்சிலை கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் முனீஸ்வரன் கூறியதாவது
பாண்டியர் காலத்தில் செங்குடிநாட்டின் எல்லைக்குட்பட்ட மோதகம் வேளாண்மை,வணிகம் செய்வதில் சிறப்பு பெற்று விளங்கி இருந்தது .இவ்வூரில் பல வரலாற்றுத் தடயங்கள் புதைந்த நிலையில், மக்கள் வசிப்பிடம் இல்லாமல் அரசாங்க பதிவேட்டில் மட்டும் ஆவாரம்பட்டி, சுப்புலாபுரம், கரையாம்பட்டி, தாதமடம் போன்ற நான்கு கிராமத்திற்கு தாய் கிராமம் என்ற பெயரில் மோதகம் தற்போது இருக்கிறது. இப்பகுதியில் தற்போது திருமங்கலம் முதல் கொல்லம் வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது . காவல்துறை சோதனைச்சாவடி அருகே மேற்கு திசையில் சாலை ஓரத்தில் தலைப்பகுதி உடைந்த நிலையில் லட்சுமி நாராயணன் கற்சிலை காணப்படுகிறது .
லட்சுமி நாராயணன் கற்சிற்பம்:
கற்சிற்பம் ஆய்வு செய்தபோது மூன்றடி உயரத்தில் தலைப்பகுதி முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. எஞ்சியவற்றை வைத்து பார்க்கும் போது இக்கற்சிலை லட்சுமி நாராயணர் சிற்பம் என்பது தெரியவந்தது. சிவன் பார்வதி இணைந்த உருவமானது அர்த்தநாரீஸ்வரர் போன்று திருமாலும் லட்சுமியும் இணைந்த உருவமாக அர்த்த லட்சுமி நாராயணர் சிற்பம் என்று வட இந்திய மக்கள் இன்றும் அழைக்கும் வழக்கம் உண்டு. இச்சிற்பங்கள் வட இந்தியாவில் அதிக அளவில் கிடைத்து வந்துள்ளது என்றாலும் ,சமீபகாலமாக லட்சுமி நாராயணர் சிற்பங்கள் தமிழகத்தில் குறிப்பாக தென்தமிழகத்தில் பரவலாக கிடைத்து வருவது என்பதும் குறிப்பிடத்தக்கவை . கள ஆய்வில் கண்டறியப்பட்ட இச்சிற்பமானது தலைப்பகுதி இன்றி சுகாசன கோலத்தில் அமர்ந்தபடி செதுக்கப்பட்டுள்ளது. இதில் நாராயணர் தனது இடது கையால் தனது மனைவி லட்சுமியை அணைத்தபடியே அன்னை நாராயணரை தனது வலது கையால் இடைப் பகுதியின் ஊடே இடையின் பின்புறமாக பிடித்தபடியும் சிற்பம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. நாராயணரின் இடது தொடையில் லட்சுமி அமர்ந்துள்ளார். நாராயணரின் மார்பில் ஆபரணங்கள் தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இடையில் ஆடையானது கெண்டைக்கால் வரை இடம்பெற்றுள்ளது. லட்சுமியின் உருவமானது மேலாடை இன்றியும் அரையாடையுடன் காணப்படுகிறார். இச்சிற்பத்தை வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது பிற்கால பாண்டியர்கள் கை வண்ணத்தில் உருவானதாகவும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் . மேலும் இந்த சிற்பத்தை சிதைந்த நிலையில் மக்கள் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர் என்றார்.
- Get link
- X
- Other Apps


Comments