பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...

புத்தகயா குண்டுவெடிப்பும் - புத்தரின் போதி மரமும்....

அமைதியை போதித்த புத்தரின் வழிபாட்டுதளத்தில் குண்டுவெடிக்க செய்து என்ன சாதிக்கப்போகிறார்கள் தீவிரவாதிகள். வாழ்க்கையின் துன்பங்களுக்கு விடைகான வந்தவரின் நினைவிடத்தில், அதுவும் புத்தருக்கு ஞானம் கிடைத்த போதிமரத்தின் அடியிலேயே குண்டுகளை வெடிக்க செய்திருக்கிறார்கள். மதம் மனிதர்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அழிவுபாதையில் செல்கிறது.குண்டுவெடிப்பு நிகழ்ந்த புத்தகயா பற்றி சில தகவல்கள்.....

உலக மதங்கள் அனைத்தும் ஆசியா கண்டத்தில் இருந்துதான் தோன்றின. அவற்றில் புத்தமதம் இந்தியாவில் இருந்து தோன்றியதாகும். புத்தமதத்துக்குரிய நான்கு புண்ணியத் தலங்களில் மூன்று இந்தியாவில் உள்ளன. மற்றொன்று நேபாளத்தில் உள்ளது. கபிலவஸ்து நகருக்கு அருகில் உள்ள லும்பினி அவருடைய பிறந்த இடம். புத்த கயா அவர் ஞானம் பெற்ற இடம். சாரநாத் அவருடைய முதல் பிரசங்கம் நடந்த இடம். குஷிநகர் அவர் இறந்தபின் மகாபரிநிர்வாணம் அடைந்த இடம். இவற்றில் லும்பினி மட்டும் நேபாளத்தில் உள்ளது. இந்த நான்கு இடங்களில் புத்த கயா மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. பாட்னாவில் இருந்து 112 கிலோ மீட்டர் தொலைவில் புத்த கயா உள்ளது. இந்துக்களின் புனித தலம் என்று கூறப்படும் கயாவில் இருந்து 13 கி.மீ தொலைவில் புத்த கயா உள்ளது. இரண்டையும் வேறுபடுத்தி கூறுவதற்காக இதை புத்தகயா என்று கூறுவார்கள். கபிலவஸ்து அரசரின் மகனாக வளர்ந்த சித்தார்த்த கௌதமர் மனித வாழ்வின் அவலங்களை தெரிந்து கொண்ட பின் அவற்றுக்கான காரணங்களை அறிய அரண்மனையில் இருந்து வெளியேறினார். அவர் இன்றைய பீகாரில் உள்ள புத்த கயாவில் உள்ள ஒரு அரசமரத்தின் அடியில் ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறது.போதி மரத்தை நமது பகுதிகளில் அரசமரம் என்று அழைப்பார்கள். ஞானம் பெறுவதற்கு முன் இவர் வீடுகளில் பிச்சையெடுத்து சாப்பிட்டு வந்துள்ளார். அவரை அடையாளம் கண்டு கொண்ட மகத பேரரசர் பிம்பிசாரர் தன்னுடைய அரியணையை அவருக்கு தருவதாக கூறியதாகவும், கௌதமர் அதை மறுத்து விட்டு கயா நோக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.மௌரிய வம்ச பேரரசர் அசோகர் புத்தர் ஞானம் பெற்ற மரத்தைச் சுற்றி ஒரு கோவிலை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கட்டினார். புத்தர் குஷிநகரில் மகாபரிநிர்வாணம் அடைந்து கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் கழித்து இந்த கோவில் கட்டப்பட்டது. கி.மு.566 முதல் 486 வரையிலானஆண்டுகளை புத்தரின் காலம் என்று வரலாறு கூறுகிறது. பின்னர் அந்த கோவில் மறுகட்டுமானம் செய்யப்பட்டது. தற்போதைய கட்டிடம் குப்தர்கள் காலத்தில் (கி.பி.6ம் நூற்றாண்டு) கட்டப்பட்டது. ஐந்து மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் இந்தியாவுக்கு வந்த பாஹியன், யுவான் சுவாங் ஆகிய சீன பயணிகள் போதி மரம் பற்றியும் அதை சுற்றி அமைக்கப்பட்டிருந்த் வேலி பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள்.


13ம் நூற்றாண்டு வரை வழிபாடு நடத்தப்பட்ட வந்த கோயில் பின்னர் பயன்படுத்தப்படாமல் இருந்துவிட்டது. அக்கால கட்டத்தில் புத்த மதம் தனது செல்வாக்கை இழந்து விட்டது. 19ம் நூற்றாண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதன் மீது கவனம் செலுத்தினார்கள். 1861ம் ஆண்டில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர்கள் மகாபோதி வளாகத்தில் ஆய்வுகளை நடத்தி மீண்டும் கோயிலுக்கு உயிர் கொடுத்தனர். 55 மீ உயரமுள்ள இந்த கோயில் இந்தியாவில் உள்ள செங்கற்களால் ஆன மிகப்பழமையான புத்த ஆலயமாகும். கோயில் மட்டும் 5.5 ஏக்கரில் அமைந்துள்ளது. போதி மரம் உள்ளிட்ட ஆறு புண்ணியத் தலங்கள், கோயில் ஆகியவை பன்னிரண்டு ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் உள்ளன. பரந்துபட்ட இந்த இடத்துக்கும், அதில் உள்ள கட்டிடங்கள் அனைத்துக்கும் ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு 2002ம் ஆண்டில் உலக பாரம்பரிய அந்தஸ்து அளித்துள்ளது. இந்த கோயிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சிறப்பு சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் வளாகம் பீகார் அரசுக்கு சொந்தமானது. 1949ம் ஆண்டில் பீகார் அரசு புத்த கயா கோயில் சட்டத்தை நிறைவேற்றியது. நாட்டில் இருக்கும் பிறமதங்களின் சிறப்பு மிக்க இடங்களுக்கு உரிமை கொண்டாடுவதை வழக்கமாக கொண்ட இந்து மத அடிப்படைவாதிகள் இந்த வளாகத்துக்குள்ளும் ஒரு சிவன் கோவிலை கட்டிவிட்டு அதை நிர்வகிக்கும் உரிமையையும் கேட்டு சச்சரவை எழுப்பினர். அதையடுத்து இச்சட்டத்தை பயன்படுத்தி மாநில அரசு 1953ம் ஆண்டில் ஐந்து இந்துக்களையும், நான்கு புத்தமதத்தவரையும் கொண்ட ஒரு குழுவை அமைத்து கோவிலை பரிபாலித்து வருகிறது. இதன் தலைவராக மாவட்ட ஆட்சித்தலைவர் இருப்பார். சிறுபான்மையினர் தேசிய ஆணையம் இக்கோவில் உள்ளிட்ட வளாகத்தின் நிர்வாக உரிமைகளை


புத்தமதத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இப்பரிந்துரைகளை நிறைவேற்ற அரசுகள் மறுத்து வருகின்றன.இந்த கோவில் வளாகத்தில் உள்ள போதிமரம் புத்தர் ஞானம் பெற்ற மரத்தின் சந்ததிதான். கி.மு.2ம் நூற்றாண்டில் அரசர் புஷ்யமித்ரா சுங்காவும், கி.பி. 600ம் ஆண்டில் அரசர் சசாங்காவும் மரத்தை வெட்டி விட்டு அதன் கிளையை அங்கு ஊன்றி புதிய மரத்தை உருவாக்கியுள்ளனர். தான் ஞானம் அடைந்த மரத்தின் முன் நின்று கண்கொட்டாமல் புத்தர் ஒரு வாரம் தியானம் செய்துள்ளார். அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. 1881ம் ஆண்டில் அங்கிருந்த மரம் பட்டுவிட்டதால், பிரிட்டிஷ் ஆய்வாளர் ஒருவர் பட்டமரத்தை அகற்றி விட்டு புதிய மரத்தை நட்டுள்ளார்.இந்த மரத்தின் கீழ்தான் பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளனர். வெடிவிபத்தால் மரத்துக்கு சேதமில்லை என்று செய்திகள் கூறுகின்றன. இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தை இவர்களால் அழிக்க முடியாது என்பதை உறுதியுடன் கூறுவோம்

தொகுப்பு செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

2 comments:

கலாகுமரன் said...

//உலக மதங்கள் அனைத்தும் ஆசியா கண்டத்தில் இருந்துதான் தோன்றின. // அப்படியா ! ?

ராஜி said...

அன்பை போதித்த ஆத்மாவின் காலடியிலேயே குண்டு. பலே! பலே! உலகத்தை அழிச்சுக்குற நாள் அருகில்தான்...