புத்தக சுமையால் தவிக்கும் பூக்கள்

பள்ளிக் கல்வித்துறை விடுக்கும் எச்சரிக்கையையும் மீறி லாபவெறியோடு தனியார் பள்ளிகள் தேவையில்லாத நோட்டுப்புத்தகங்களைக் கொடுத்து பள்ளிக்குழந்தைகளை மனஅழுத்தத்தில் தள்ளி வருகிறார்கள். பள்ளிக்குழந்தைகள் தங்கள் எடையை விட கூடுதலான எடையுடன் புத்தகங்களைச் சுமப்பதால் அவர்களது உடல்நலம் மட்டுமின்றி மனநலமும் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில், புத்தகச்சுமையைக் குறைக்க முப்பருவ கல்வித்திட்டத்தை அமல்படுத்தியது. இதன்படி காலாண்டுத் தேர்விற்கான பாடங்களை அரையாண்டுக்கும், அரையாண்டு வரைப் படித்த பாடங்களை முழு ஆண்டுத் தேர்வுக்கும் படிக்கத் தேவையில்லை. இதற்காக புத்தகங்களும் மாற்றி அமைக்கப்பட்டன.

இதன்படி ஒவ்வொரு பருவத்திற்கான பாடங்கள் அனைத்தும் ஒரே புத்தகமாக வடிவமைக்கப்பட்டது. இதில் அந்தந்த பருவத்திற்குரிய தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களும் இடம் பெற்றிருக்கும். முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு புத்தகமும், 6,7,8 ஆகிய வகுப்புகளுக்கு இரண்டு புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் தமிழ், ஆங்கிலம் பாடத்தை சேர்த்து ஒரு புத்தகமும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடத்தை சேர்த்து ஒரு புத்தகமாக வழங்கப்படுகிறது. மூன்று பருவத்திற்கும் தனித்தனியாக புத்தகம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களின் புத்தகச்சுமை ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, புத்தகச் சுமை குறைந்தாலும், நோட்டுப்புத்தகச் சுமை குறையவில்லை.

பள்ளி நிர்வாகங்கள் தரும் நோட்டுப் புத்தகங்களில், 60 சதவீதம் மட்டுமே பயன்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத நோட்டுப் புத்தகங்களை, மாணவர்கள் பயன்படுத்துவதில்லை. பொதுவாக, மாணவர்கள் தங்கள் உடல் எடையில், 5 சதவீத அளவிற்கு தான் எடையை சுமக்க வேண்டும். ஆனால், தற்போதைய பள்ளி மாணவர்கள் 15 சதவீதத்திற்கும் அதிகமான எடை கொண்ட புத்தக மூட்டையை சுமக்கின்றனர். இதன் காரணமாக, ஆரோக்கியமாக உள்ள 10 முதல் 30 சதவீத மாணவர்களுக்கு முதுகு வலி ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கை கட்டணம் என்ற பெயரில் பல ஆயிரம் ரூபாயையும், மாதாந்திரக்கட்டணம் என்ற பெயரில் பல ஆயிரம் ரூபாயையும் பறிக்கும் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் புத்தகச்சுமையைக் குறைக்க பல வழி வகை உள்ளது.பாடப் புத்தகங்களின் எண்ணிக்கையை குறைத்து, சிடி, யு.எஸ்.பி., பிளாஷ் டிரைவ்ஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். இதற்கு வாய்ப்பில்லாத பள்ளிகளில், லாக்கர் சிஸ்டத்தை அமல்படுத்தலாம். அதாவது, மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களை பள்ளியிலேயே தங்களுக்கான லாக்கர்களில் வைத்து விட்டு செல்லலாம். மேலும், அன்றைய கால அட்டவணைக்கு ஏற்ற பாடப்புத்தகங்களை மட்டும் எடுத்து வரலாம்.


இதனால், மாணவர்களின் புத்தகச்சுமை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. மேலும், பாடத்திட்டத்தில் அளவை குறைப்பதன் மூலம் புத்தகச் சுமையை ஓரளவுக்கு குறைக்க முடியும். ஆனால், சுமைப்பணி தொழிலாளி போல முதலாம் வகுப்பு மாணவ, மாணவியர்களை மாற்றியுள்ள மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். எல்கேஜி, யூகேஜி என்று அழைக்கப்படும் மழலைப்பள்ளிகளை மாடியில் நடத்தக்கூடாது என்ற விதியிருந்தும் மதுரையில் மாடிகளில் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்தமாடிகளுக்கு புத்தகமூடையைச் சுமக்கும் நிலைக்கு மாணவச்செல்வங்கள் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளிக்கு வெளியே பெற்றோரை நிறுத்தி விடும் பள்ளி நிர்வாகம் பொதிமூடைகளைச் சுமக்கும் குழந்தைகளிடமிருந்து புத்தக மூடையை வாங்கி வகுப்பில் சேர்க்கும் ஏற்பாடுகளைச் செய்வதில்லை. தேவையில்லாத நோட்டுப் புத்தகங்களை கொண்டு வருமாறு, தனியார் பள்ளி நிர்வாகங்கள் நிர்ப்பந்தம் செய்வதாக தகவல்கள் வருகின்றன.

அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் எடுத்துச் செல்வது போல், தேவையான நோட்டுப் புத்தகங்களை மட்டும் கொண்டு வருமாறு பள்ளி நிர்வாகங்கள் கூற வேண்டும். இது குறித்து, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக கூறப்பட்டது. ஆனால், மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளி மாணவ, மாணவியர் சுமக்கும் புத்தகங்களைப் பார்க்கும் போது சுற்றறிக்கை வந்ததாகவோ, அதை பள்ளி நிர்வாகங்கள் கண்டுகொண்டதாகவோ தெரியவில்லை. பள்ளிக்குழந்தைகளின் மனநலனுக்கு, உடல் நலனுக்கு எதிரான புத்தகச்சுமையைக் குறைக்க தமிழக அரசு ஏதாவது உடனடிச் சட்டம் இயற்றினால் கூன் விழாத அடுத்த தலைமுறை உருவாகும்.


தொகுப்பு செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

உண்மை... குழந்தைகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்...

வருங்காலத்தில் சுமைகளே இருக்கவும் வாய்ப்பில்லை... காகிதம் இருந்தால் தானே...!
ராஜி said…
என்னதான் சட்ட திட்டங்கள் போட்டாலும் பசங்க பாடுதான் திண்டாட்டமா இருக்கு. 10வது போகும் என் மகள் சுமக்கும் பையின் எடை எப்படியும் 7 லிருந்து 10 கிலோ இருக்கும்