‘முத்தலாக்’கின் அரசியல் அவதாரம்

சமீபத்தில் மோடி அரசாங்கம் முத்தலாக் குறித்தஅவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இதை விடவும் அவசரமும், முக்கியத்துவமும் வாய்ந்த பல்வேறு பிரச்சனைகளில் காட்டாத அவசரமும் அக்கறையும் இதில் ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. 2018 செப்டம்பர் 19ஆம் தேதி நாட்டின் குடியரசுத்தலைவரால் பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டத்தின் பெயர் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) அவசர சட்டம், 2018. இது முத்தலாக் அவசரச்சட்டம் என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது.ஒரு முஸ்லிம் கணவர் தனது மனைவியை ஒரே நேரத்தில் மூன்று தடவை தலாக் செய்வதாகக் கூறி விவாகரத்து செய்வதைத் தான் முத்தலாக் என்று பொதுவாக அழைக்கின்றனர். இது தலாக் இ பித் ஹத் என அழைக்கப்படுகிறது. இறைவனின் பார்வையில் விவாகரத்து வெறுக்கத்தக்கது என்று குர் ஆன் கூறுகிறது.ஷரியத் சட்டத்தின் படியும், இஸ்லாமிய கோட்பாடுகளின்படியும் இப்படி கணவரால் ஒரே நேரத்தில் முத்தலாக் கூறி தனது மனைவியை விவாகரத்து செய்வது சட்டப்பூர்வமானது அல்ல என்று பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து கூறுகின்றனர். குறிப்பாக கணவன்மனைவி இடையே பிணக்கு ஏற்படும் போது தம்பதியினரிடையே சமரசம் ஏற்படுத்த உரிய முயற்சி தேவை என்றும் குர் ஆன் வற்புறுத்துகிறது. குடும்ப கவுன்சலிங் ஒவ்வொரு கட்டத்திலும் தேவை என்பதையும் கூறுகிறது.இத்தகைய முயற்சிகள் தோல்வியுற்று, விவாகரத்தை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படுமாயின் உரிய சாட்சிகள் முன்னிலையில் மூன்று மாத இடைவெளிகளுக்குள் தனித் தனியாக மூன்று தடவை தலாக் என்று அறிவித்து, அது முறைப்படி அவரது மனைவிக்கும் உரிய முறையில் தெரியப்படுத்தினாலே அது ஷரியத் அடிப்படையில் முறையான விவாக ரத்தாகும் என்று அத்தகைய மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இதற்கு மாறாக முத்தலாக் கூறி தனது மனைவியை விவாகரத்து செய்யும் கணவர்கள் சிலரால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. இத்தகைய முறை பெரும்பாலானோரால் ஏற்கப்பட இயலாதது.

முத்தலாக் முறையை தடை செய்துள்ள இஸ்லாமிய நாடுகள்

இஸ்லாமிய முறைப்படி ஆட்சி நடக்கும் நாடுகள் மற்றும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளான எகிப்து, இராக், ஜோர்டான், குவைத், லிபியா, மொராக்கோ, சூடான், சிரியா, துனீசியா, ஐக்கிய அரபு எமிரேடுகள், ஏமன், இந்தோனேசியா , மலேசியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் சட்டப்படிதிருமண விவாகரத்துக்கான விதிமுறைகள் வகுக்கப் பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே முத்தலாக்என்ற முறையில் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையிலும், விவாகரத்தில் தன்னிச்சையான முறைகள் பின்பற்றப்படக் கூடாது என்ற அடிப்படையிலும், உரிய சட்டப்பூர்வமான அனுமதியுடனேயே விவாகரத்து செய்யப்பட வேண்டும் என்பதை அந்நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இந்தியாவில் இப்போது ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பா.ஜ.க. ஆட்சியின்நோக்கம் அதுவல்ல. மாறாக தங்களுடைய அரசியல்நோக்கங்களுக்கு பயன்படுத்தவே தற்போது எத்தனையோ அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் உள்ள நிலையில் இதை கையிலெடுத்துள்ளது.

முத்தலாக் வழக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பும்

2017 ஆகஸ்ட் 22இல் உச்சநீதிமன்றம் முத்தலாக் குறித்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வெளி யிட்டது. இந்த தீர்ப்பு மாண்புமிகு நீதிபதிகள் ஜகதீஷ் சிங்கெஹார், குரியன் ஜோசப், ரொஹிண்டன் பாலி நாரிமன்,உதய் உமேஷ் லலித், அப்துல் நசீர் என்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வால் நீண்ட விசாரணைகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. இந்த தீர்ப்பின் மூலம் பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவின் அடிப்படையில் முத்தலாக் என்று ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் தலாக் இ பித்ஹத் எனும்முறை சட்டப்பூர்வமானது அல்ல என்று அறிவித்து, அதை ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பு குறித்து பரவலாக வரவேற்பும் ஒரு சிலரால் விமர்சனமும்முன் வைக்கப்பட்டாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு அரசியல்சட்டப்படி இறுதியானது என்பதால் அந்த தீர்ப்பின்படி முத்தலாக் எனும் முறை தடை செய்யப்பட்டு, செல்லாதது என்ற நிலை ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டாகி விட்டது. அத்தீர்ப்பு கூறிவதாவது:தனிநபர் சட்டம் அடிப்படை உரிமை என்ற அடிப்படையில் அனைத்து நீதிமன்றங்களும்அதை பராமரிக்கவும், பாதுகாக்கவும் செய்ய வேண்டியது அரசியல் சட்டப்படியான கடமை. அதனால் இதில் ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டுமாயின் அரசியல் சட்ட ஷரத்து 25(2) மற்றும் 44இன் படியான நாடாளுமன்ற சட்டத்தின் மூலமே அது சாத்தியப்படும். அத்தகைய சட்டம் ஒன்று நிறைவேற்றப்படுவது வரை முஸ்லிம் கணவர்கள் தனதுவிவாக உறவை முடிவுக்கு கொண்டு வரும் வகையில்முத்தலாக் அறிவிப்பு வெளியிடத் தடை விதிக்கப்படுகிறது. இத்தடை 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும், 6 மாதத்திற்குள் நடவடிக்கை துவங்கி முத்தலாக்குறித்த நாடாளுமன்ற சட்ட ரீதியான மறு விளக்கம் அல்லதுமுழுமையாக அம்முறையை நீக்கும் சட்ட நடைமுறை துவக்கப்பட்டால் அந்த சட்ட நடைமுறை முடியும் வரை தடை தொடரும் என்று அத்தீர்ப்பு கூறுகிறது.

நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்

அத்தீர்ப்பின்படி நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டு வந்து விவாகரத்துக்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இத்தீர்ப்பை சாதகமாக்கி கொண்டு நரேந்திர மோடி அரசாங்கம் தனது இயல்பான முஸ்லிம் வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலும்,பழி வாங்கும் வகையிலும் ஒரு புதிய சட்ட முன் வடிவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால்அச்சட்ட முன்வடிவின் மீது உரிய கலந்தாலோசனை களையோ, கருத்து அறிதலையோ செய்ய மறுத்துவிட்டது. இத்தகைய தனிநபர் சட்ட முன்வடிவுகளைக் கொண்டு வரும் போது அம்மதம் சார்ந்த மார்க்க அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள் ஆகியோரிடத்தில் விரிவான ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். மேலும் முழுமையான கருத்துப் பரிமாற்றங்களுக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். சட்ட முன்வடிவை தயாரிக்கும் முன்னரும், தயாரித்த பின்னரும் கூட இத்தகைய கலந்தாலோசனைகள் விரிவான கருத்தொற்றுமையை ஏற்படுத்த வழி வகுக்கும். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அத்தகைய நோக்கம் எதுவும் இல்லை. தங்களது அரசியல் நோக்கம் மட்டுமே அதன் முன்னால் இருந்தது. எனவே தான் எத்தகைய கருத்துப் பரிமாற்றமும்இன்றி அந்த சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததோடு, தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் முறையான, விரிவான விவாதம்ஏதும் இன்றி நாடாளுமன்ற மக்களவையில் அந்த சட்ட முன்வடிவை நிறைவேற்றியது. அந்த சட்ட முன்வடிவில் ஏராளமான குளறுபடிகள் இருந்தன.நமது நாட்டிலும், பிற நாடுகளிலும் திருமணம், திருமண முறிவு ஆகியவை சிவில் சட்டங்களாகவே இருந்துவருகின்றன. ஆனால் இந்த சட்டம் மட்டும் கிரிமினல் சட்டவகையாக உருவாக்கப்பட்டு, விவாகரத்து செய்யும் கணவருக்கு சிறைத் தண்டனை வழங்கும் வகையில் சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை எதிர்த்தன விமர்சித்தன. எனவே இச்சட்டத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி, விரிவான ஆலோசனைகளுக்கும், பரிசீலனைக்கும் உட்படுத்த வேண்டுமென்று மாநிலங்களவையில் வற்புறுத்தப்பட்டது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் முத்தலாக் முறையை தடை செய்துள்ள நிலையில் அவசர அவசரமாக இச்சட்டத்தை நிறைவேற்ற தேவை யில்லை என்றும், சட்ட நடவடிக்கைகள் துவங்கி முடிவது வரை அத்தடை நீடிக்கும் என்றும் உச்சநீதிமன்றம்தனது தீர்ப்பில் தெளிவுபடுத்திவிட்டதால் அவசரப்படத் தேவையில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கூறியும் அரசு செவி சாய்க்கவில்லை. எனவே தனக்கு பெரும்பான்மை இல்லாததால் மத்திய பா.ஜ.க. அரசால் மாநிலங்களவையில் இதை நிறைவேற்ற இயலாமல் போயிற்று. இந்நிலை யில் தான் அவசரச் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக நாடாளுமன்ற பரிசீலனையில் உள்ள ஒரு சட்டம் குறித்து அவசரச் சட்டம் வெளியிடுவது முறையல்ல என்றாலும், அரசியல் சட்டத்தை கிஞ்சிற்றும் மதிக்காத பாஜக அரசு இத்தகைய அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது.

அவசரச் சட்ட விதிகள்

சட்டம் மற்றும் நீதித் துறையினால் பிறப்பிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் ( திருமண உரிமைகள் பாதுகாப்பு ) அவசரச் சட்டம் ஜம்மு-காஷ்மீர் தவிர இந்தியா முழுவதும்உடனடியாக அமலுக்கு வரும். என்று ஷரத்து 1 கூறுகிறது. இச்சட்டத்தின் ஷரத்து 4இன் படி முத்தலாக் கூறும் கணவர் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கும், அபராதத்திற்கும் உள்ளாவார். ஷரத்து 5இன்படி விவாகரத்து செய்யப்பட்ட திருமணமான பெண் மாஜிஸ்டிரேட்டால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை தனக்காகவும், தனது குழந்தைகளுக்காகவும் வாழ்க்கைப்படியாகப் பெற உரிமையுள்ளவராவார். ஷரத்து 7இன் படி இத்தகைய விவாகரத்து புரிந்ததாக திருமணமான பெண்ணாலோ அல்லது உறவினராலோ ஒரு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டால் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் கைது செய்யத்தகுந்த குற்றம்புரிந்தவர் ஆகிறார். அப்படிகுற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டால் அவரின் மனுவின் அடிப்படையில் திருமணமான பெண்ணின் தரப்பையும் கேட்டபின்னர் உரிய காரணங்கள் இருந்தால்மட்டுமே அவருக்கு மாஜிஸ்டிரேட்டால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று இந்த அவசரச் சட்டம் கூறுகிறது.

அவசரச் சட்டம் குறித்த விமர்சனங்கள்

இந்த அவசரச் சட்டம் குறித்து மதச்சார்பற்ற அரசியல்சட்ட நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், பெண்ணியவாதிகள் உட்பட பல தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இந்த அவசரச் சட்டம் எவ்வித கலந்தாலோசனைகளோ, கருத்துப் பரிமாற்றமோ இன்றி அவசரஅவசரமாக கொண்டுவரப்பட்டுள்ளது. பிற மதங்களைச் சார்ந்த மக்களின் திருமணம் மற்றும், விவாகரத்து குறித்தசட்டங்கள் எல்லாம் சிவில் சட்டமாகவே இருக்கின்ற போது முஸ்லிம்களின் விவாகரத்து குறித்த இச்சட்டம் கிரிமினல் சட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்பதைவிட முஸ்லிம் ஆண்களை பழிவாங்கும் வகையில் தண்டனை வழங்குவதே முக்கிய நோக்கமாக வுள்ளது. எனவே தான் பிணையில் வர முடியாதவகை யில் கைது நடவடிக்கையும், 3 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் சிறையில்அடைக்கப்படும் ஒரு கணவரிடமிருந்து மனைவி தனக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம்பெறுவதற் கான வாய்ப்பு எப்படி உருவாகும் என்ற புரிதல் கூட இல்லாமல் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நாடாளு மன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்படாமலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைப்படி சட்ட முன்வடிவு நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படாமலும் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில் இத்தகைய அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது அரசின் துர்நோக்கத்தையே காட்டுகிறது. கணவனால் கைவிடப்படும் முஸ்லிம் பெண்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் பிரதமர் தான், தனது
திருமண உறவைக் கூட தேர்தல் உறுதிமொழி பத்திரத்தில் மறைத்து வந்தார் என்பதும், விவாகரத்து கூட செய்யாமல் தனது மனைவியை இளம் வயதிலேயே கைவிட்டு அபலையாக்கினார் என்பதும் அவரது நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது.

-எஸ்.நூர்முகம்மது
நன்றி தீக்கதீர் நாளிதழ்






Comments