தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான மதுரை அரிட்டாபட்டி புகைப்படங்கள்

 


மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தை பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரிட்டாபட்டி கிராமத்திற்கு சில ஆண்டுகளுக்கு  முன் எழுத்தாளார் முத்துக்கிருஷ்ணனின்  பசுமை நடை குழுவினரோடு சென்றிருந்தபோது எடுத்த புகைப்படங்கள இந்த கட்டுரையோடு வெளியிட்டுள்ளேன்  

 அரிட்டாபட்டி கிராமம் என்பது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதார பகுதியாக செயல்படுகிறது 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளது. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் 250 பறவையினங்கள் உள்ளன. இதில் லகர் இராசாளி, ஷாஹீன் இராசாளி, மற்றும் இராசாளிப் பருந்து ஆகிய 3 முதன்மையான கொன்றுண்ணிப் பறவையினங்கள் உள்ளன. எறும்பு திண்ணிகள், மலைப்பாம்பு மற்றும் அரிய வகை தேவாங்கு ஆகிய வனவிலங்குகளும் உள்ளன. இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. 

அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை


 தென்னிந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் அரிட்டாபட்டி மலையில் மட்டுமே அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை கூடு கட்டி வசித்து வருவதாக பறவையியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்பட்ட இப்பறவைகள் தற்போது ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் மிக அரிதாக அரிட்டாபட்டி மலையில் இந்தப் பறவைகள் வசித்து வருகின்றன.இந்தப் பறவைகள் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

வேட்டைப் பறவைகளான கழுகு இனத்தைச் சேர்ந்த இவை மலை உச்சியில் உள்ள பாறைகளின் இடுக்குகளில்தான் கூடு கட்டும். தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மட்டுமின்றி தென்னிந்தியாவில் வேறு எங்குமே இந்தப் பறவை இனங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமண சிற்பங்கள் நிறைந்தபகுதி..









இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமண சிற்பங்கள், படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், குடவரைக் கோயில்கள் இங்கே காணப்படுகின்றன. இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பை அளிக்கிறது. மலையைக் கடவுளாக வணங்கும் அரிட்டாபட்டி பகுதி மக்கள் இந்த மலையை பாதுகாத்து வருகின்றனர். அவர்களது இந்த மகத்தான பணியால் அரிட்டாபட்டி மலை பல உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், பாதுகாப்பிட மாகவும் விளங்குகிறது. 

Comments