இப்போதுதான் கள்ளநோட்டு புழக்கம் அதிகமாகி விட்டது!

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர்தான், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக மோடி அரசின் புலனாய்வுப் பிரிவே அறிக்கை அளித்துள்ளது.கறுப்புப்பணத்தை ஒழிக்கிறேன் என்று கூறி, பிரதமர் மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கறுப்புப் பண ஒழிப்பு, ரொக்கப் பரிவர்த்தனையை குறைப்பது, தீவிரவாத நடவடிக்கை ஒழிப்பு என்று இதற்கு காரணம் கூறினார்.இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். பெரும் பணத்தட்டுப்பாடும் ஏற்பட்டது.பின்னர், புதிய 2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆனாலும் இதுவரை நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. ஏடிஎம்-க்கள் காற்றாடுகின்றன. ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதற்கு மை இல்லை என்று நாசிக் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் மையம் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது.ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப் பாட்டின் பின்னணியில் சதி இருப்பதாக கூறி, பாஜக-வைச் சேர்ந்த மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் கூறுகிறார். அந்த சதிகாரர்கள் யார்? என்பதை அவரும் கூறவில்லை; மத்திய பாஜக அரசும் கேட்கவில்லை. எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது என்றுமட்டுமே நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறி வருகிறார்.இந்நிலையில் ரூபாய் நோட்டு வாபஸ்நடவடிக்கைக்குப் பின் கள்ள நோட்டு களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு, மற்றொரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.இதுகுறித்து புலனாய்வு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் பண மதிப் பிழப்பு நடவடிக்கைக்கு பிந்தைய நிதி யாண்டில், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரி மாற்றமும் அதிகரித்துள்ளது என தெரி விக்கப்பட்டுள்ளது.பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முந்தைய நிதியாண்டில் (2015-16) 4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டன. ஆனால் 2016-17 நிதியாண்டில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன என்றும் புலனாய்வு பிரிவு கூறியுள்ளது. இதேபோல், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் 2015-16 நிதியாண்டை விட, 2016-17 நிதியாண்டில் 400 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கைதெரிவிக்கிறது.
பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, பொருளாதார அறிஞர்களும் பலர் கூறி வந்தனர். அதனை புலனாய்வு பிரிவின் இந்த அறிக்கை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது.பண மதிப்பிழப்பிற்கு முன்பு நாட்டில், 17.64 லட்சம் கோடி அளவிற்கு பணப்புழக்கம் இருந்தது. ஆனால், இப்போது அதைவிட அதிகமாக 17.97 லட்சம் கோடி பணப் புழக்கம் உள்ளதாக, ரிசர்வ் வங்கியே அண்மையில் புள்ளிவிவரம் வெளியிட்டது.
ரொக்கப் பரி வர்த்தனை குறைப்பேன் என்றுதான் மோடிகூறினார். ஆனால், பணப்புழக்கம் அதிகரித்து இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. கறுப்புப் பணம், கள்ள நோட்டு ஒழிப்பும் மோடியின் மற்றொரு வாக்குறுதி. ஆனால், புலனாய்வு பிரிவு அறிக்கை மூலம் அதுவும் இல்லை என்றாகி இருக்கிறது. தீவிரவாத ஒழிப்புபற்றி தனியாக சொல்ல வேண்டிய தில்லை. பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகுதான் எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் அதிகரித்து இருக்கிறது. எனவே, அனைத்து வகையிலும் மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வி அடைந்து விட்டது என்பதே இன்று உண்மையாகி இருக்கிறது.

தகவல் தீக்கதீர்



Comments