நந்தினி கொலைக்கு நீதி வேண்டும்! நடிகர் கமல்ஹாசன்

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சிறுமி நந்தினிக்கு நீதி கிடைத்தாக வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் குரலெழுப்பியுள்ளார்.கொலைக்கு காரணமானவர்கள், காவியோ, காதியோ, பச்சையோ, வெள்ளையோ, சிவப்போ அல்லது கறுப்போ.. அது பிரச்சனையில்லை என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17), இந்து முன்னணி ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களால் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் குற்றவாளிகள் பற்றிய அடையாளம் தெரிந்தும், காவல்துறை அவர்களுக்குச் சாதகமாகவே நடந்து கொண்டது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு, சுமார் 20 நாட்களுக்குப் பிறகே மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சாதாரண பிரச்சனைகளைக் கூட ஊதிப் பெரிதாக்கும் ஊடகங்கள், தலித் இளம்பெண்கள் படுகொலை செய்யப்படும்போது, அப்பிரச்சனையை கண்டுகொள்ளாமல் விடுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதேபோல எதுவெதற்கோ கருத்து சொல்லும் சினிமா பிரபலங்கள் தலித்துக்கள் மீதான வன்முறையை கண்டுகொள்ளாமல் கடந்து விடுவதும் காலம் காலமாக இருக்கிறது.


நந்தினி படுகொலையையொட்டி, இவ்விஷயங்கள் மீண்டும் வலைத்தளங்களில் விவாதப் பொருளாகின. இந்நிலையில், தமிழ்த் திரையுலகின் மூத்த கலைஞரான கமல்ஹாசன், நந்தினிக்காக குரல் கொடுத்துள்ளார். “நந்தினிக்கு நீதி கிடைத்தாக வேண்டும். காவியோ, காதியோ, பச்சையோ, வெள்ளையோ, சிவப்போ அல்லது கறுப்போ எதுவுமே விஷயம் இல்லை” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், “குற்றம் நிகழ்த்தப்படுவதற்கு கடவுள் காரணம் இல்லை. நான் முதலில் மனிதன்; இரண்டாவதாக இந்தியன். இந்த விவகாரத்தில் சற்று தாமதமாக என் கவலைக் குரலை எழுப்பியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். என் கோரிக்கை என்பது நீதி கிடைக்க வேண்டும் என்பதற்குத்தானே தவிர பழிவாங்கலுக்கு அல்ல” என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments