பூமிக்கு காய்ச்சல்


தற்போது சென்னையை பாடாய் படுத்தும் மழைக்கு என்ன காரணம்? அதே நேரத்தில் என்ன வெயிலு... என்ன வெயிலு கொளுத்துப்பா...இப்படி நாம் அடிக்கடி புழம்புகிறோம்.மே மாத கடைசியோடு முடிய வேண்டிய வெயிலின் தாக்கம் செப்டம்பர் மாதம் வரை இருக்கிறது.அதே போல மார்கழி, தை குளிர்காலமும் வழக்கத்தை விட கடும் குளிராக மாறி கொண்டுவருகிறது. மேலும் மழை துவங்கியதுமே டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவத்தொடங்கி உயிர் பலி வாங்குகிறது.  வரும் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமான அளவில் பரவும் என்று அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.புளோரிடா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த டிரேக் கூமிங்ஸ் என்ற ஆய்வாளர்  வெப்பமான பருவநிலை மாற்றத்தினால் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும். குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவைச்சேர்ந்த 8 நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறார். 1997லிருந்து இந்த எட்டு நாடுகளில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. அடுத்து ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக நோய்கள் பரவிவருகின்றன.
கடற்கரை கிராமங்களை கொஞ்சம் ,கொஞ்சமாக கடல் விழுங்கி வருகிறது.
எதிர்பாராத வறட்சி, வெள்ளம் ,புயல் அதனால் பாதிக்கப்படும் விவசாயம்.... இப்படி நிறைய பாதிப்புகள் நம் கண்முன்னால் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் ?  நாம் வாழும் பூமிக்கு  காய்ச்சல்  வந்து விட்டது தான்..


200 ஆண்டுகளுக்கும் மேலாக
 தொடரும் காய்ச்சல்...

நமக்கு காய்ச்சல் வந்தால் எப்படி உடல் சூடுபரக்குமோ, அதே போல பூமி கடந்த 200 ஆண்டுகளாக கொஞ்சம்கொஞ்சமாக சூடேறி இப்போது உச்சகட்டத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது காய்ச்சல்.பூமியின் காய்ச்சலை குணப்படுத்தாவிட்டால்  அதனால் எற்படும் விளைவுகள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு கொடுரமானதாக இருக்கும் என்கிறார்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.
               பூமியின் வெப்பநிலை அது உருவான காலத்திலிருந்தே மாறி வந்திருக்கிறது.  5000 முதல்   - 30,000 ஆண்டுகளுக்கு முன் பூமி கனமான பலத்த பனி போர்வையால் போர்த்தப்பட்டிருந்தது.இது பனியூழிக்காலம் எனப்படுகிறது.கடந்த 7000 ஆண்டுகளாகத்தான் பூமி மெல்லமெல்ல சூடேற்றப்பட்டிருகிறது. பூமியின் சாரசரி வெப்பம் 15 டிகிரி செல்சியஸ் தான்.19 ம் நூற்றாண்டுவரை உலக வெப்பநிலை 0.74+ லிருந்து 0.18 டிகிரி சி மட்டுமே அதிகரித்தது.20  ம் நூற்றாண்டின் மையப்பகுதியிலிருந்து தான் பூமியின் வெப்பம்  மிக வேகமாக அதிகரிக்கத்தொடங்கியது. காலநிலை பன்னாட்டு  கண்காணிப்புக்குழு  2007 வெளியிட்ட 150 ஆண்டுகளில் மிக வெப்பமான ஆண்டுகளாக..
1990,1995,1997,1998,1999,2000,2005,2003,2002,2004,2006,&20011   என பட்டிலிட்டுள்ளது.

பூமிக்கு காய்ச்சல் வந்தது எப்படி?

பூமி இயற்கையாக சூடாக  காடுகள் அழிப்பு, எரிதல், எரிமலைக்குமுறல்கள்,விவசாயம் செய்தல், ஆடுமாடு வளர்த்தல் இது போன்ற சில காரணங்கள் இருந்தாலும் கூட  இயற்கை நிகழ்வை விட மனிதனின் மூலம் பெட்ரோல், நிலக்கரி எரிப்பு,மின்சாரம் உற்பத்தி,வாகனங்களின்பயன்பாடு,தொழில்சாலையில் வெளிப்படும் கழிவுகள்,நச்சுபுகை இவற்றில் தான்  பூமியை சூடாக்கும் அதிகமான கார்பன் வெளியேறுகிறது.

பூமியின் சூடாக முக்கியகாரணம் யார்?

                 
சமீபத்தில் கொச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர், "காலநிலை மாற்றத்திற்கு வளர்ச்சி அடைந்த நாடுகள்தான் வரலாற்றுரீதியாக பொறுப்பேற்க வேண்டும். அந்த நாடுகள் வெளியிட்ட கரியமில வாயுக்கள் மற்றும் தொழிற்கழிவு வாயுக்களே பூமி சூடாவதற்கும், அதன் விளை வாக கால நிலைமாற்றங்களுக்கும் காரணம்" என்கிறார்.
              மனிதர்களின் தேவைக்கு மீறிய  நுகர்வு காலாச்சாரம்த்தை பயன்படுத்தி அமெரிக்க, ஐரோப்ப நாடுகள் தங்கள் வளர்ச்சிக்காக  உருவாக்கிய தொழிற்சாலைகள் பூமியில் கொட்டும்கழிவுகளும், வெளியேற்றும் கரியமில வாயும் தான் காரணம்.
              குளிப்பானங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள், ஆடம்பர கார்கள், விதவிதமான எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன்கள், உள்ளிட்ட பொருட்களை வாங்க விளம்பரங்கள் மூலம் நுகர்வோரை துண்டி பொருட்களை உற்பத்தி செய்கின்றன.  தேவைக்கு அதிகமான பொருட்களை உற்பத்தியாகும் போது உருவாகும் கழிவுகள்,வெறியேறும் புகை , அதிக மின்சாரத்தை பயன்படுத்துதல் உள்ளிட்டவைதான் பூமி சூடாக முக்கிய காரணம்.மேலும்  உலக அளவில் உற்பத்தியாகும் பொட்ரோலில் 40 சதம்   அமெரிக்கா பயன்படுத்துகிறது.
 அதிக மின்சக்தியை பயன்படுத்துவதில் பின்லாந்து,நார்வே, கத்தார், கனடா மற்றும் குவைத் நாடுகள் முன்னிலை அமெரிக்கா 9 வது, இந்தியா 160 வது, வாகன போக்கு வரத்தில்அமெரிக்க ஜக்கிய நாடுகள், இத்தாலி, கனடா,ஜப்பான்,ஸ்வீடன் மற்றும் நியூசிலாந்து போன்றவை முன்னிலை.மின்சக்தி பெரும்பாலும் நிலக்கரியை எரிப்பாதனால் கிடைக்கிறது. நம் நாட்டில் 75 சதம் நிலக்கிரியிலிந்து தான் மின்சாரம் கிடைக்கிறது.
உலகமக்கள் தொகையில் 4 சதம் உள்ள அமெரிக்கா 30.3 சதமும், 17 சதம் உள்ளஇந்தியா 2.4 சதமும் கரியமில வாயு வெளியேற்றுகின்றன.
        10,000 ஆண்டுகளாக 10சதம் மட்டுமே உயர்ந்த கரியமில வாயு ,கடந்த 200 ஆண்டுகளில் 30 சதத்திற்கு மேல் உயர்ந்திருக்கிறது.கடந்த  150 ஆண்டுகளில் 39 சதம்.  கடந்த 4,20,000 ஆண்டுகளில் இதுவே அதிகம், தினசரி 74 டன் கரியமில வாயு வெளியேறி பூமியை சூடாக்குகிறது.

பூமிக்குகாய்ச்சல் அதிகமானால் 
என்ன ஆகும்?
நமக்கு காய்ச்சல் அதிகமாகி உடல்சூடு அதிகமானால் சாவு நிச்சயம். அதே போலத்தான் பூமியின் வெப்ப நிலை அதிகமாக அதிகமாக பூமி கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கும் மனித இனம் அழிந்துபோகும்.
பூமி சூடாகி கொண்டிருக்கிறதுமனித இனமே அழிந்து போககூடிய ஆபாயம் இருக்கிறது. வெகு சீக்கிரமே பாதை மாறி திரும்ப முடியாத எல்லையை அடைய நேரிடலாம் எனவே அவசர நடவடிக்கை தேவை என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றார்கள்.
            பூமி இதுவரை ஏற்பட்ட வெப்பம் அதிகப்பால் பலமாற்றங்கள் ஏற்பட தொடங்கி விட்டன.
            பூமி வெப்பமடைவதால் துருவப்பகுதியிலுள்ள பனியாறுகள் உருகி ஒடிக்கொண்டிருக்கின்ற,அதனால்கடல் மட்டும் 15 செ.மீ வரை உயர்ந்துள்ளது. கடல்பரப்பைவிழுங்குகிறது.அங்கு வாழும் மக்களின் வாழ்நிலை பாதிக்கப்படுகிறது.இதனை தடுக்க தவறினால் 35 ஆண்டுகளில் வடதுருவமோ,இமயமலையோ,தென்துருவமோ இருக்காது.இப்போது ஆண்டார்டிக் பகுதியில் பனி மலைகள் உரு கிகொண்டிருக்கிறது
இப்படியே விட்டால் கடல்மட்டம் 18 முதல் 59 செ.மீ வரை அதிகரிகும் 90 சதம் வெப்ப அலையும் மறுபுறம் மழை,வெள்ளம் அதிகரிக்கும் கோடை காலம் மிக நிண்டதாக இருக்கும், சில இடங்களில் ஆதித மழை, எதிப்பாராத புயல், வெள்ளம், பயிர்கள்,உயிர்கள்பாதிப்பு, நிலநடுக்கம், சுனாமி உருவாகும்,  கடல் மட்டம் உயரும்.
                  கடல் மட்டத்திற்கு சில மீட்டர்கள் மட்டுமே உயரே இருக்கும் பசிபிக் கடலில் உள்ள டுவாலு தீவு, இந்துமாக் கடலில் உள்ள மாலத்தீவுகள் போன்ற தீவுகள் கடலுக்குள் மூழ்கிவிடும் ஆபத்து இருக்கிறது.    உலகில் தாழ்வான டெல்டா பகுதிகளில் இருக்கும் கங்கை - பிரம்மபுத்ரா, மியான்மாரைச் சேர்ந்த இர்ரவாடி போன்ற இடங்களும் உயரும் கடல் மட்டத்தினால் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது.உலக மக்களில் பத்து சதத்திற்கும் மேற்பட்டோர் கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரத்திற்குள் வசிக்கிறார்கள்.2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பருவநிலை அறிக்கையின்படி  சுமார் 20 கோடி மக்கள் சொந்த நாட்டை விட்டு இடம் பெயரும் நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது.

 இதை தடுக்க முடியுமா?
பருவ நிலை மாற்றம், சுற்றுச்சுழல் பாதிப்பு குறித்து உலக நாடுகள் கவலைப்பட்டத்தின் விளைவாக 1992 ம் ஆண்டு ஜ.நாவின் ரியோடிஜேனிரோ மாநாடு, அடுத்ததாக 2010 மாநாடு இதில் கரியமில வாயுவை வெளியிடும் அளவை குறைக்க வளர்ந்த நாடுகள் முன்வரவேண்டும். வளரும் நாடுகளை குறை கூறக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உலக நாடுகள், ஐநாவின் சார்பாக காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு என்ற நிபுணர்கள் மற்றும்  விஞ்ஞானிகள்  கொண்ட அமைப்பு ஒன்றை  உருவாக்கியுள்ளன. இவ்வமைப்பு ஆண்டுதோறும் பூமி முழுவதும் ஏற்பட்டு வரும் கால நிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு அறிக்கைகளை ஐநா சபைக்கு சமர்பித்து வருகிறது.70க்கும் மேற்பட்ட நாடுகள் பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்து வருகின்றன.இந்த ஆய்வுகள் உலக நாடுகளுக்கு சில ஆலோசனைகளை முன் வைத்துள்ளன.
               10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைக்கு பூமியை கொண்டுவர இன்னும் சுமார் 50 ஆண்டுகள் ஆகலாம்.
உலகின் வெப்ப நிலையை குறைக்கும் வாயுகளை 2015க்குள் குறைக்க முயல வேண்டும் 2020க்குள் வளர்ந்த நாடுகள் 50 சதம் குறைக்க வேண்டும்.2050களில் 90-95 சதம் குறைக்க வேண்டும் இப்போது இருப்பது போல விட்டால் 30-35 டிகிரி வெப்பம் உயரலாம்.
                இப்போதைய நிலவரப்படி2030 ல் இந்தியாவில் 15-20 டிகிரி வெப்ப உயர்வை சந்திக்கும். குளிர்காலம் கூட வெப்பமாக இருக்கும்.மழைபெய்வது பாதிக்கப்படும். 12 சதம் நிலம்  வெள்ளப்பாதிப்புக்குள்ளாகும். 28 சதம் வறட்சி.மழைபொழிவு இன்னைமையால் விவசாயம் பாதிக்கப்படும்.வெயில்காலத்தில் கடுமையான வறட்சியும், மழைகாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஒடி பயிரை விளைச்சலை பாதிக்கும்.2050 ல் 40 சதம் அளவுக்கு விவாசாய உற்பத்தி பாதிக்கும்.பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி விளைச்சலை மட்டுமல்ல தானியங்களின் தரத்தையும் பாதிக்கும்.
                  காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள்  உதவ வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது. இதன் படிகடந்த 2010ல் காலநிலை மாற்றத்திற்கான பசுமை நிதி அமைப்பு உருவாக்கப்பட்டது.
 ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (1 பில்லியன் = 100 கோடி; 1 டாலர் = 65 ரூபாய்)அளிப்பதாக  அமெரிக்கா,ஐரோப்பா உள்ளிட்ட வளந்த நாடுகள் உறுதி அளித்திருந்தன. கால நிலை மாற்றத்திற்கான சர்வதேச மாநாடு பாரீசில் 2015 நவம்பர் 30லிருந்து டிசம்பர் 11 வரை நடைபெற உள்ளது என்பது குறிபிடத்தக்கது .

பூமியன் காய்ச்சலை குறைக்க நாம் என்ன செய்யலாம்...

இதெல்லாம் பெரியபெரியநாடுகள் செய்யவேண்டிய வேலை நாம என்ன செய்ய முடியும் என நாம் ஒதுங்கியிருக்க முடியாது.பூமியின் உயர்ந்து வரும் வெப்பத்தை குறைக்க நாம் ஒவ்வொருவரின் ஒத்துழைப்புமிக அவசியமான ஒன்று.
1.டூவிலர்  பகுமானத்தை விட்டு பொதுபோக்குவரத்தான பேரூந்துபயணத்தை கடைபிடிக்கலாம்.
2.வெளிநாடுகளில்  20 - 25 கிமீ துரத்தில் உள்ள இடங்களுக்கு சைக்கிள் பயணத்தையே விரும்புகிறார்களாம் நாம் முயற்சிக்கலாமே.
3.தேவையற்ற ஆடம்பட பொருட்களை வாங்கி குவிப்பதை தவிர்கலாம்.
4.மின்சார தேவையை குறைத்துக்கொள்ளலாம், யாருமற்ற இடத்தில் பேன்,டிவி ஒடுவதை தவிர்கலாம்.
5.சூரிய சக்தி மின் சக்தியை பயன்படுத்தலாம். கரியமில வாயு வெளியிடாத புதுபிக்கப்படும் சக்தி சூரிய சக்தி.
நாம் வாழும் பூமியின் காய்ச்சலை குணப்படுத்த வேண்டியது நம்கடமை.இல்லையானால் நம் சந்ததிகளுக்கு மிக கொடூரமான வாழ்கையை மட்டுமே இந்த பூமி கொடுக்கும்...

நவம்பர் மாத தமிழ்வாசல் இதழில் வெளிவந்த எனது கட்டுரை
- அ.தமிழ்ச்செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments