அப்துல்லா மனைவி மேரி - மகன் சுப்பிரமணி?????

அப்துல்லா மனைவி மேரி - மகன் சுப்பிரமணி ... இது உண்மைதானா? உண்மை தான்.ஆச்சரியம், ஆதிர்ச்சி, மகிழ்ச்சி என கலவையான உணர்வுகளை உருவாக்குகிற  தகவல். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ,நாவல்பிரியர்களுக்கு தெரிந்த எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அனுபவ பகிர்வு இது.

நிருபர் :
உங்கள் வாழ்க்கையில் சந்தித்த மறக்க முடியாத அனுபவம் ஒன்றை சொல்லுங்கள்...
“எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் உண்டு. சமீபத்தில் நான் பழனிக்கு ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். காலையில் நடைபயிற்சி சென்று வரலாம் என எண்ணி சாலையோரம் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது எனது அருகில் இருசக்கர வாகனம் ஒன்று வந்து நின்றது. அதில் ஓர் இளைஞர் அவர் மனைவி கைக்குழந்தையுடன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினார்கள். அந்த இளைஞன் என்னைப் பார்த்து சார் நீங்கள் ராஜேஷ்குமார் தானே என்றான். ஆம் என்றேன்.


என் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு நான் உங்கள் ரசிகன் சார். உங்கள் கதைகள் என்றால் எங்கள் இருவருக்கும் பிடிக்கும் என்றான். மிகுந்த மகிழ்ச்சியோடு அப்படியா ரொம்ப மகிழ்ச்சி உங்கள் பெயர் என்ன என்றேன். என் பெயர் அப்துல்லா, இது என் மனைவி மேரி என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி நீங்க முஸ்லிம். உங்கள் மனைவி கிறிஸ்தவர் காதல் திருமணமா என்றேன். ஆமாம் சார். காதல் திருமணம்தான் அது ஒரு போராட்டக் கதை சார், இப்போ மகிழ்ச்சியாக இருக்கிறோம் என என்னிடம் பேசிவிட்டு இருவரும் விடை பெற்றனர்.

நான் அவர்களை பார்த்து இப்போ எங்க போயிக்கிட்டு இருக்கீங்க என்றேன்.

அதற்கு அப்துல்லா பழனி மலைக்கு சார், முருகனை பார்க்க என்றார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது எப்படி என்றேன்.
         வண்டியின் ஓரம் போனவர் திரும்பி வந்து சார் நான் ஒருத்தரை தங்களுக்கு அறிமுகப்படுத்த மறந்துவிட்டேன் என்றவர். என் அருகில் வந்து தன் மகனை தூக்கி என்னிடம் காண்பித்து இவன் பெயர் சுப்பிரமணி என்றார். எனக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, மகிழ்ச்சி மூன்றும் ஒரு சேர ஏற்பட்டது. அவரே விளக்க ஆரம்பித்தார். நான் முஸ்லிம் என் மனைவி கிறிஸ்தவர்.
எங்கள் காதலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எங்கள் இருவர் வீட்டிலும் ஏற்பட்டது. என்ன செய்வதென்று புரியவில்லை. அப்போது எனது நண்பன் எங்களை பாதுகாத்தான். திருமணம் செய்து வைத்தான். நாங்கள் இன்று உயிரோடு மகிழ்ச்சியாய் இருக்கிறோம் என்றால் அது எனது நண்பனால் தான். அவன் பெயர் சுப்பிரமணி. எனது நண்பனின் பெயரையே என் மகனுக்கு வைத்தேன். அதனால் தான் சார் நாங்கள் என் மகன் சுப்பிரமணியனோடு மலையில் இருக்கிற சுப்பிரமணியனைப் பார்க்கப் போறோம் என்றவர். உழைத்து சாப்பிடும் எல்லோருக்கும் எல்லா சாமியும் ஒன்று தானே சார் என்றவர் என்னிடம் விடை பெற்று மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றதை பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
                  நான் ஆச்சர்யம், அதிர்ச்சி, மகிழ்ச்சி மூன்றும் ஒரு சேர அனுபவித்தேன். அவர்களை வாழ்த்தினேன்”. நாமும் அந்தத் தம்பதிகளை வாழ்த்துவோம்.ஆர்எஸ்எஸ் இந்துத்வா அமைப்புகள் எத்தனை தகிடுதத்தம் செய்து மக்களை பிரிக்க நினைத்தாலும் மக்கள் ஒற்றுமையை பிரிக்க முடியாது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியே.

நாளிதழில் ஒன்றில் தஞ்சை கே.பக்கிரிசாமி
 என்பவர் எழுதியுள்ள தகவல் தொகுப்பு 


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

மிகவும் மகிழ்ச்சி... சிறப்பான தகவலுக்கு நன்றி...