அஞ்சான் ...வன்முறை வெறியாட்டம்

மர்கண்டேயன் மகனே.. இளைய உலக நாயகனே... என்றபடி மதுரையில் சூர்யா பிறந்தநாளுக்கு போஸ்டர்கள்...அந்த வாரத்திலேயே நான் கமல் மாதரி இல்லை என வார இதழ் ஒன்றுக்கு பேட்டியும் கொடுத்திருந்திருந்தார் சூர்யா.ரசிகர்களுக்கு சிவாஜி,கமல் வரிசையில் சிறந்த நடிகராக வேண்டும் என்பது ஆசை .ஆனால் அந்த எண்ணம் இல்லை என அவரும் சொல்லிவிட்டார். அஞ்சான் படமும் அப்படித்தான் இருக்கிறது.
லோக்கல் தாதா படம் என்றால் மதுரையில் எடுப்பார்கள். இந்திய அளவில்,உலக அளவில் தாதா என்றால் மும்பைக்கு செல்கிறார்கள் தமிழ் நடிகர்கள்.
துப்பாக்கி படத்தில் வில்லன் (வித்யூத்ஜமால்)இதில் கதாநாயகனின் நண்பனாக வருகிறார்.படம் முழுக்க... முழுக்க கத்தி,துப்பாக்கி,ரத்தமுமாக வன்முறை அதிகம். இடையிடையே கவர்ச்சி நடனங்கள் என படம் விருவிருப்பாக இருந்தாலும். சூர்யாவுக்கு நடிப்புக்கு இது தேவையில்லை...
சுருக்கமாக கதை
கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்கிறார் கிருஷ்ணா. அங்கு தன் அண்ணனான ராஜூவை தேடி அலைகிறார். அப்போது சந்துரு, ராஜூ இருவரும் தன் அடியாட்களுடன் அந்தேரியில் கடத்தல் தொழில் செய்து வந்தாக ராஜூவின் கூட்டாளியான கரீம்பாய் கூறுகிறார். கரீம் பாய் மூலம் மற்ற விவரங்களை கேட்டு அறிகிறார் கிருஷ்ணா.

அப்போது அந்தேரிக்கு புதிய கமிஷனராக வரும் அசோக் குமார், சந்துரு, ராஜூவின் ஆட்களை கைது செய்து விடுகிறார். இதனால் கோபமடையும் ராஜூ கமிஷனரின் மகளான நாயகி ஜீவாவை திருமணத்தின்போது கடத்தி விடுகிறார்.

கமிஷனரிடம் தன் கூட்டாளிகளை விடுவிக்கும்படி பேரம் பேசுகிறார் ராஜூ. அதன்படி கூட்டளிகளை கமிஷனர் விடுவிக்க, ராஜூவும் ஜீவாவை விடுவிக்கிறார். இதைத்தொடர்ந்து நடக்கும் சில சந்திப்புகளில் ராஜூ, ஜீவா இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.

இதற்கிடையில் மும்பையில் மிகப்பெரிய தாதாவான இம்ரான் பாய் சந்துருவையும் ராஜூவையும் விருந்துக்கு அழைக்கிறார். அங்கு இருவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் இம்ரான் பாய். இதனால் கோபம் அடையும் சந்துரு புலம்பியபடி இருக்க, ராஜூ இம்ரான் பாயை கடத்தி வந்து நண்பன் சந்துருவிடம் காண்பிக்கிறார். இருவரும் சேர்ந்து இம்ரான் பாயை மிரட்டி அனுப்புகின்றனர். இதனால் சந்தோஷம் அடையும் சந்துரு, ராஜூவுக்கு புதியதாக கார் ஒன்றை வாங்கி கொடுத்து ஜீவாவுடன் ஜாலியாக சுற்றிவிட்டு வர அனுப்புகிறார்.


இருவரும் மும்பையை சுற்றி வரும்போது திடீர் என்று துப்பாக்கி சத்தம் கேட்கிறது. ராஜூவை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வருகிறது. அதிலிருந்து ராஜூ தப்பிக்கிறார். அப்போது ராஜூவுக்கு ஒரு இடத்திற்கு வரும்படி போன் வருகிறது. அங்கு சென்று பார்க்கும் போது சந்துரு வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடக்கிறார். இதைக்கண்டு கொதிக்கும் ராஜூ, இம்ரான்பாய் தான் சந்துருவை கொன்று இருப்பான் என்று கூறிக்கொண்டு இம்ரானை தீர்த்துக்கட்ட கூட்டாளி அமர் உடன் காரில் செல்கிறார்.

கார் பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது ராஜூவின் கூட்டாளியான அமர் காரை நிறுத்தி விட்டு, ராஜூவையும் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். குண்டு பாய்ந்த ராஜூ பாலத்தில் இருந்து நீரில் விழுந்து விடுகிறார். இந்தக் கதையை கரீம் பாய் சொல்ல கிருஷ்ணா கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ராஜூவை சுட்டுக்கொன்ற அமர் தனது கூட்டாளிகளுடன், கரீம் பாயை சந்திக்க வருகிறான்.

அங்கு கிருஷ்ணாவை சந்திக்கிறான். நான்தான் ராஜூவை கொன்றேன் என கிருஷ்ணாவிடம் கூறுகிறான். இதைக் கேட்டு கோபமடையும் கிருஷ்ணாவையும் சுட்டுக் கொல்லுமாறு தன் கூட்டாளியிடம் துப்பாக்கியை தருகிறான் அமர். இங்கேதான் படத்தில் திரும்புமுனை ஏற்படுகிறது. மீதிக்கதையை திருட்டு சிடியில் பார்க்காமல் வெண்திரையில் பார்க்கவும்

பிதாமகன் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சூர்யாவின் படதேர்வு சரியாக இல்லை.யுவன் சங்கர் ராஜா இசையும், சமந்தாவின் கவர்ச்சி நடிப்பும், பெண்களுக்கு சூர்யா என படம் வெற்றிப்படமாக அமையலாம். ஆனால் இளைய உலக நாயகனாக வருவார் என்று பார்த்தால் அவரது நோக்கம் வேறுமாதிரியாக இருக்கும் போலிருக்கிறது.

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments