சென்னை நகருக்கு வயது 375 ....


சென்னை நகருக்கு இன்றோடு 375 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு தொடங்கியது இங்குதான் என்பது வர லாற்றுப் பதிவாகும். அன்று ஒரு சிறு கோட்டையாக வங்காள விரிகுடாவின் கடலோரத்தில் அமைந்திருந்த இந்த நகரம் இன்று பரந்து விரிந்த பன்மொழி பேசும் மக்களும், பல நாட்டவரும் கூடி நல்லிணக்கத்தோடு வாழும் நகரமாக மாறி நிற்கின்றது. இந்த நக ரத்தில் தமிழகத்தின் மரபுகளும், இன்றைய நவீனமும் கலந்து மணக்கிறது.

சென்னையின் தொடக்கம்


இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதலில் வாங்கிய நிலம் சென்னைதான். இந்த நிலத்தை கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரிகளான பிரான்சிஸ் டே என்பவரும், ஆண்ட்ரூ ஹோகனும் ஒரு ஆங்கிலேயக் குடியிருப்பை அமைக்க இடம் தேடி அலைந்தனர். அவர்களுக்கு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த சந்திரகிரியில் இருந்த சிற்றரசருக்குக் கட்டுப்பட்ட குறு நில மன்னரான வந்தவாசியில் இருந்த வெங்கடாத்ரி நாயக் ஒரு சிறு துண்டு நிலத்தைகொடையாக அளித்தார்.

அவர் நன் கொடையாக நிலத்தை அளித்த நாளான ஆகஸ்ட் 22, 1639ஐ சென்னையின் பிறந்தநாளாக மக்கள் கொண்டாடத் தொடங்கி யுள்ளனர். கடலின் முகப்பில் கூவம் நதிக்கும், இளம்பூர் நதிக்கும் இடையில் இருந்த நிலத்தில் ஒரு கோட்டை கட்டிக் கொள்ள வெங்கடாத்ரி நாயக் ஆங்கிலேயர்களுக்கு அனுமதி அளித்தார். சென்னப்ப நாயக்கரின் பெயரில் புதிதாகத் தோன்றும் ஊர் அழைக்கபட வேண்டும் என்பதற்காக இப்பகுதியை சென்னப்பட்டினம் என்று வெங்கடாத்ரி நாயக் அழைத்தார்.கடல் வணிகத்துக்கு வந்த ஆங்கி லேயர்கள் தங்கள் மக்கள் தங்கவும், விற் பனைப் பொருட்களைப் பாதுகாக்கவும் ஒருகோட்டையை அங்கு நிறுவினர். 1640ம்ஆண்டு மார்ச் முதல் நாளன்று கோட்டை யின் முதல் கல் ஊன்றப்பட்ட போது நவீனஇந்தியாவின் முதல் நகரமான சென்னை பிறந்தது. அந்தக் கோட்டையின் பெரும்பகுதி தூய ஜார்ஜின் தினமான 23.4.1640அன்று முடிந்ததால் அந்தக் கோட்டைக்கு தூய ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப் பட்டது. அந்த கோட்டைக்குள் தூய மேரி ஆலயமும் கட்டப்பட்டது. இதுதான் இந்தியாவில் நிறுவப்பட்ட முதலாவது ஆங்கிலிக்கன் தேவாலயமாகும்.

ஆங்கிலேயர்கள் அங்கு குடியேறிய பின் இயல்பாக நெசவாளர்கள், வண்ணம் பூசுவோர், தச்சர்கள், குயவர்கள் என உள் ளூர் மக்கள் குடியேறத் தொடங்கினர். ஆங்கிலேயரின் குடியிருப்புக்கு வெளியே உருவான இந்தக் குடியிருப்பு கறுப்பர் நகரம் என்று பெயரிடப்பட்டது. பிரான்ஸ் படை களின் தாக்குதலின் போது இந்த கறுப்பர் நகரம் அழிக்கப்பட்டது. பிரான்சிஸ் டேக்கும், ஹோகனுக்கும் சைகை மொழிபெயர்ப்பாளராக இருந்த பெரி திம்மப்பா இந்த நகரில் குடியேறிய முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கோட்டைக்குள்ளே 1664ல் உருவான ஆங்கில மருத்துவமனை பின்னர் கோட்டைக்கு வெளியில் வந்தது. 1842 முதல் அங்குஇந்தியர்களுக்கும் சிகிச்சை அளிக்கப் பட்டது. அதுதான் இன்றைய அரசு பொது மருத்துவமனை.

மெரினா கடற்கரை

மவுண்ட் ஸ்டூவர்ட் 1870ம் ஆண்டில் சென்னை வந்தார். அவருடைய நண்பர் கூறியபடி அவர் சென்னை கடற்கரையைப் பார்த்து வியந்துவிட்டார். குளிர்ந்த காற்றை இனிமையாக அள்ளித்தரும் கடற்கரை இன்னும் அழகாக இருக்க வேண்டும் என அவர் விரும்பினார்.1881ம் ஆண்டில் அவர் சென்னை ராஜதானியின் ஆளுநராக வந்தார். தாம் இளமையில் நினைத்தபடி சென்னை கடற்கரையை அழகுபடுத்தினார்.அழகுபடுத்தும் பணிகள் முடிந்தவுடன் சிசிலித்தீவில் இருந்த ஓவியம் ஒன்றின் பெயரான மெரினா என்ற பெயரை கடற் கரைக்கு சூட்டினார். அது இன்று வரை நிலைத்துவிட்டது.இன்றைய சென்னை பல கிராமங்களை விழுங்கி உருவானது. நவாப்புகளின் குடியிருப்புகள் இருந்த சையதுகான் பேட்டை இன்று சைதாப்பேட்டையாகி விட்டது. திரு அல்லிக் கேணி என்ற திருவல்லிக்கேணியும், பிராமணர்கள் குடியிருப்பு நிறைந்த மயிலாப்பூரும், கிறிஸ்தவர்கள் நிறைந்த சான் தோமும் சென்னை யின் விரிவாக்கத்தில் விழுங்கப்பட்ட பகுதிகளாகும்.

தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, திருவொற்றியூர், கத்திவாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், வேப்பேரி. கோடம்பாக்கம், புலியூர் என பல கிராமங்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னையோடு இணைக்கப்பட்டன. பின்னர் பல்லாவரம் என்று அழைக்கப் படும் பல்லவபுரம், கிண்டி, வேளச்சேரி போன்றவை சென்னையுடன் சேர்க்கப் பட்டன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத் தின் அருகில் இருந்த மத்திய சிறை ஒரு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். சுபாஷ் சந்திரபோஸ், சாவர்க்கார் உள்ளிட்ட வரலாற்று தலைவர்கள் இங்கு சிறை வைக்கப் பட்டிருந்தனர். ராயபுரம் ரயில்வே நிலை யம் தென்னிந்தியாவில் நிறுவப்பட்ட முதலாவது ரயில் நிலையமாகும். சென்னையின் வரலாறு மிக நீண்டது. நாட்டின் முதல் நகரம் என்பதால் நாட்டின் முதல் நிகழ்வுகள் பல இங்கு நடந்துள்ளன. 1635ம் ஆண்டில் கவர்னர்’ஸ் பேங்க் என்ற பெயரில் நாட்டின் முதல் வங்கி இங்கு நிறுவப்பட்டது. இந் திய ராணுவத்தின் முதல் படைப்பிரிவு சென்னையிலும், கடலூரிலும் இந்திய மக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

சென்னை நகரின் பிரச்சனைகள் ஏராள மாக உள்ளது. குடிநீர், பாதாள சாக்கடை, சிற்றேவல் புரிவோரை முப்பது கிலோ மீட்டர் தொலைவில் குடியமர்த்தி சிங்காரச் சென்னை உருவாக்கப் போகிறோம் என்பது ஏற்க முடியாததொன்றாகும். ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. நீர்நிலைகள் அழிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உதாரண மாக பள்ளிக்கரணை படும்பாட்டைச் சொல்லலாம். இன்னும் சில வருடங்களில் இதுவும் ஒரு குடியிருப்பாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. நகரை அழகுபடுத்த வேண்டாம் என்று நாம் கூறவில்லை. நகரம் என்பது வெறும் கான்கிரீட் காடுகள் அல்ல. மக்களும், இயற்கையும் சேர்ந்து வாழவேண்டிய இடமாகும். அங்குமரங்களும், சோலைகளும் இருக்க வேண்டும். பறவைகளும், விலங்குகளும் இணைந்து வாழவேண்டும். ஒரு வளமான சென்னையை உருவாக்க இந்த நாளில் அனைவரும் உறுதி ஏற்பது அவசிய மாகும்.

தகவல் தீக்கதிர்
தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments