நேருவின் ‘ஆதிவாசி மனைவி’


பஞ்சட் அணையைத் திறந்து வைப்பதற்காக 1959 டிசம்பர் 6ந்தேதி வருகை புரிந்த அன்றைய பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேருவை வரவேற்கும் குழுவில் தன்னையும் இணைத்ததற்காக 15 வயது சந்தல் இனப்பெண்ணான புத்னி மெஜான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். ஆதிவாசிப்பெண்களின் பாரம்பரிய ஆடை அணிகலன்களுடன், வரவேற்பு நிகழ்ச்சியில் பஙகேற்ற அவரிடம் நேருவுக்கு மாலையணிவித்து வரவேற்கும் கவுரவம் அளிக்கப்பட்டது. அதனை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றிய அவரை, நேரு விழா
மேடைக்கு அழைத்துச்சென்றார்.கட்டுமானப்பணியில் பங்கேற்ற ஒரு தொழிலாளிதான் பொத்தானை அழுத்தி அணையைத் திறக்கவேண்டும் என்று கருதிய நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க புத்னியே பொத்தானை அழுத்தி அணையைத் திறந்துவைத்தார்.

தனக்கு அளிக்கப்பட்ட கவுரவத்தை தனது குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் பரபரப்புடன் தனது கிராமமான கர்பானாவுக்குத் திரும்பிய அந்த ஆதிவாசிப்பெண்ணிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த அப்பாவிப்பெண்ணின் எதிர்காலமே இருளில் தள்ளப்பட்டது. நீ நேருவுக்கு மாலை அணிவித்ததால் நடைமுறையில் உனக்கும் அவருக்கும் திருமணமாகிவிட்டதாகப் பொருள் என்று அந்த கிராம வாசிகள் தெரிவித்தனர்.
அடுத்தநாள் ஊர்ப்பெரியவர்கள் நடத்திய கூட்டத்தில் அவள் நேருவின் மனைவியாகிவிட்டாள் என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதனால் அந்த கிராமத்தைச்சேர்ந்த எவரையும் திருமணம் செய்து கொள்ளும் தகுதியையும் அவள் இழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஆதிவாசிப்பெண்ணான அவள், சந்தல் இனத்தைச்சாராத ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதால் அந்த கிராமத்திலிருந்தே விலக்கி வைக்கப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கப்புறக்கணிப்பை
எதிர்கொள்ள நேரிடும் என்று அஞ்சிய அவளது குடும்பத்தார், அவளை கைவிட்டுவிட்டனர். அனாதையாக்கப்பட்ட அவளுக்குக் குடிக்கத் தண்ணீர் அளிப்பதற்குக்கூட எவரும் முன்வரவில்லை. பஞ்சட் அணைக்கட்டுமானப் பிரதேசத்துக்கு திரும்பிய அவளுக்கு சுதிர் தத்தா என்ற ஒருவர் அடைக்கலம் அளித்தார் .கணவன் -மனைவியாக வாழ்ந்த அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. 1962ம் ஆண்டில் அவளது வேலையும் பறிபோய்விட்டது. சிறு சிறு வேலைகளை செய்து தனது பிழைப்பை நடத்தி வந்தாள். 23ஆண்டுகள் கழித்து ராஜீவ் காந்தியை சந்தித்து தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் தனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தாள். நேருவின் பேரனின் தயவினால் அவளுக்கு வேலை திரும்பவும் கிடைத்தது. இதன் மூலம் எனது வயிற்றுப்பசி நீங்கியது என்ற போதிலும் தான்பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறவில்லையே என்ற வேதனையுடனேயே வாழ்ந்துவிட்டு கடந்த ஆண்டில் அந்த அப்பாவிப்பெண் மரணமடைந்தார். நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்ட நேருவின் செயல் இத்தகைய விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கற்பனை செய்து கூட பார்த்திருக்கமாட்டார்.
-கி. இலக்குவன்

(ஆதாரம்: ‘தி இந்து’ 2-06-2012)

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Robin said…
Interesting!