கேரி பேக்கு’களும் அணுகுண்டுகளும்


இன்றைய தலைமுறையினரது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பிளாஸ்டிக் ‘கேரிபேக்’ மாறிவிட்டது, இப்படி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை நாம் முறையாக அப்புறப் படுத்துகிறோமா? இல்லை. மாறாக, பூமிக்கு கேடுவிளைவிக்கும் வகையில் தெருவில் வீசுகிறோம், பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்றுமண்டலம் மாசுபடுகிறது, பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.

பொதுவாக 18 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்யமுடியாது. இதனால் இவை நீர்நிலைகள், நிலத்தடி நீர், மண் படிவ நீரை தடுத்து, நீர் ஆதார வழிகளின் ‘நெட்வொர்க்கையும்’ பாதிக்கிறது, இந்த வகையில் ‘கேரிபேக்’ எனும் பாலிதீன் பைகளும் ‘யூஸ் அண்ட் த்ரோ’ பிளாஸ்டிக் கப்புகளும் இயற்கையை அழிப்பதில் முன்னணியில் உள்ளன. ஒரு ‘கேரிபேக்’ மண்ணோடு மண்ணாகி அழிய 400 ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானம் சொல்கிறது. மேலும் மண்ணில் புதைவதால் மரங்களுக்கு நீர் எடுத்துச் செல்லும் வேர்களை பாதிக்கிறது. தண்ணீரில் மிதக்கும் பாலிதீன் பைகளால் குப்பைகள் பெருகுவதோடு, விலங்குகளுக்கும் தொற்றுநோய் ஏற்படுகிறது.

ஹோட்டல்களில் ‘கேரிபேக்’கில் சுடச்சுட உணவுகளை பார்சல் செய்து கொடுக்கின்றனர். சாம்பார் போன்றவைகளையும் சிறிய பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுக்கின்றனர். சூடாக இருந்தால், பாலிதீன் பை இளகி, அதில் உள்ள ரசாயனம் உணவுப்பொருட்களுடன் கலக்கிறது. அதை உண்பவர்களுக்கு குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது, குழந்தைகளையும் பாதிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு பாலிதீன் பைகள் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. அவைகள் மண்ணில் மக்காமல் அப்படியே இருப்பதால் பூமியின் தன்மையே மாறுபடுகிறது. மழை நீரை உறிஞ்சும் சக்தியை மண் இழக்கிறது. இன்னும் ஒரு முக்கியப் பிரச்சனை, எத்தனை மாடுகள் பாலிதீன் பைகளை தின்று தீர்க்கின்றன தெரியுமா? சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாட்டின் வயிற்றை அறுவை சிகிச்சை செய்து அதில் இருந்து 40 கிலோ பாலிதீன் பைகள் எடுத்து வெளியில் கொட்டப்பட்டன.

தமிழகத்தில் சில நகரங்களில் இதுபோன்ற பாலிதீன் பயன்பாட்டைத் தடுக்கும் முயற்சிகள் நடந்தன. மதுரை, கன்னியாகுமரி, சின்னமனூர், கூடலூர், தேனி, இராமேஸ்வரம் என சொல்லலாம். தொழில் நகரமான குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் கடந்த ஜனவரி மாதம் முதல் பாலிதீனை தடை செய்வது என நகராட்சி முடிவு செய்தது.

நகர்ப்பகுதி முழுவதும் இருக்கும் வணிகர்கள், வர்த்தகங்கள், சிறுகடை வியாபாரிகள் என அனைவரோடும் கலந்து பாலிதீன் குறித்த தீமைகளை விளக்கிச் சொல்லியும். இதுபோன்று 3 கூட்டங்களை நடத்தி அதன்பிறகு இத்திட்டத்தை நகராட்சியில் அமல் படுத்தினோம் என்று கூறிய நகர்மன்றத் தலைவர் ரா.முருகேசன், தற்போது நகராட்சி நிர்வாகத்திற்கும். பாலிதீனால் வாறுகால் தடைபட்டு கழிவுநீர் செல்லாமல் தேங்கியும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடையூறு இருந்தது. பாலிதீன் ஒழிப்பிற்கு பின்னால் தற்போது இந்நிலை மாறி இருக்கிறது என்றார். இதற்கான மாற்று திட்டமாக காகிதப்பை செய்யும் இயந்திரத்தின் மூலம் 32 மாற்றுத் திறனாளிகள் மூலம் பை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜவுளிக்கடைகளில் பெரிய பைகளாக கொடுப்பதற்கு அதிக முதலீடு செய்யவேண்டி உள்ளதால் அது குறித்து பரிசீலித்து வருகிறோம். உறுதியாக பாலிதீன் இல்லா நகரமாக சிவகாசியை உருவாக்குவோம் என்றார்.

ஆனால், தற்போது நான்கு மாதங்களுக்கு பின்பு மீண்டும் சிவகாசியில் பாலிதீன் உபயோகப் படுத்தப்படுகிறது. மக்கள் பாலிதீனை கைவிடும் வரை நகராட்சி நிர்வாகத் தரப்பில் தொடர் முயற்சி இருந்தால் மட்டுமே பாலிதீனை ஓழிக்க முடியும். மேலும் உத்தரவு மூலம் மட்டும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தமுடியாது. மக்களுக்கு புரியவைக்க வேண்டும்.

கடைக்கோ அல்லது வெளியில் எங்கும் செல்லும்போது நிச்சயமாக ஒரு கைப்பையை எடுத்துச் செல்லுங்கள். எந்தப் பொருள் வாங்கினாலும் பாலிதீன் பையில் வாங்குவதைத் தவிர்ப்போம் எனப் பிரச்சாரம் செய்ய வேண்டியது உள்ளது. வீட்டில் இருந்து கடைக்கோ, இட்லி மாவு அல்லது உணவுப் பொருளோ வாங்கச் செல்லும் போது அதற்குண்டான பாத்திரங்களை கொண்டு செல்வதன் மூலம் இதனால் அவற்றுக்காக நாம் பயன்படுத்தும் இரண்டு அல்லது மூன்று பாலிதீன் பைகளை பயன்படுத்தாமல் தடுக்க முடியும். இதுவே எல்லா விஷயங்களிலும் பொருந்தும். எவ்வளவோ சீர்கேடுகள் இருக்க பாலிதீன் பையை பற்றி மட்டும் ஏன் இவ்வளவு கவலை என்ற கேள்வி எழலாம்.

மலைபோலக் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள், அணுகுண்டை விட ஆபத்தானது. அடுத்த தலைமுறையினருக்கு பேராபத்து.

இதை உணர்ந்தே, நிலைமை மோசமாவதை தவிர்க்க பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது அதனை தயாரிப்பவர்களே பயன்படுத்திய பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கும் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது காலம் கடந்த எச்சரிக்கை என்றாலும் இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கப் பழகுவோம். துணிப்பைகள், சணல் பைகள், பழைய துணிகளால் தைக்கப்பட்ட பைகள், விழாக்களில் கொடுக்கப்படும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்போம். பாலித்தீன் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

கட்டுரையாளர், 
-பி.பாலசுப்பிரமணியன்
வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர், விருதுநகர்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்.

Comments

நல்ல பகிர்வு!
துணிப்பைகள், சணல் பைகள், பழைய துணிகளால் தைக்கப்பட்ட பைகள், விழாக்களில் கொடுக்கப்படும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம். //சிந்திக்கக் கூடிய பதிவு அருமை .
Anonymous said…
migavum payanulla karuthukalai pagirthuleer....padipathodu matumallamal nadaimuraiyil anaivarum pinpatrinal sutrusoolalai paadhukakalam....
Anonymous said…
இது போன்ற பைகள் தேங எங்ககே கிடைக்கிறது எனது கடைக்கு தேவைபடுகிறது தயாரிப்பாளர் இருந்தால் தொடர்பு கொள்ளவும் 8344222111
  • சென்னை - கோவையை கலக்கும் புதிய மொபைல் செயலி...
    30.09.2015 - 0 Comments
    சென்னை ,கோவை நகரங்களுக்கு புதிதாக செல்பவர்களுக்கு   ஒரு குறிபிட்ட இடத்திற்கு செல்ல வழி தெரியாமல்…
  • அனேகன்...காலம் கடந்து நிற்கும் காதலின் கதை
    16.02.2015 - 3 Comments
    1960 களில் பர்மாவில் துவங்கும் காதல் காட்சிகளும், பாடல்காட்சிகளும், பர்மாவில் ஏற்படும் ராணுவ புரட்சி…
  • கக்கூஸ்’  - நம் முகத்தில் அறையும்  ஆவணப்படம்
    10.03.2017 - 3 Comments
    கக்கூஸ்’ என்று பெயர் மூலமாகவே நம் முகத்தில் அறைகிறது இந்த 115 நிமிட ஆவணப்பட ஆக்கம். நரகத்தையொத்த…
  • இலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில்  ஒரு கோயில்
    12.03.2018 - 5 Comments
    எம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை…
  • உங்கள் கண்களை நம்புகீர்களா ?
    08.05.2012 - 0 Comments
    ஆம் என்றால் ,கீழே உள்ள படங்களை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள். இவை புகைப்படம் மற்றும் ஓவியத்தையும்…